Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

சிங்கத்திடம் செல்பி கேட்ட இளைஞர்.. நூலிழையில் உயிர் தப்பிய அதிர்ச்சி சம்பவம்!

By Christon
05 Aug 2025, 05:20 PM
சிங்கத்தின் அருகில் சென்று செல்பி எடுக்க முயன்ற இளைஞர், அதன் தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் பவநகர் பகுதியில், இரை உண்டுகொண்டிருந்த சிங்கம் ஒன்றின் அருகில் சென்று செல்பி எடுக்க முயன்ற இளைஞர், அதன் தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிங்கத்திடம் செல்பி எடுக்க முயன்ற நபர்

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் தனது செல்போனில் சிங்கத்திடம் செல்பி எஎடுக்க அதன் அருகில் செல்கிறார். இரை உண்டுகொண்டிருந்த சிங்கம், மனிதனின் நடமாட்டத்தைக் கவனித்து, தன்னை அச்சுறுத்தும் ஆபத்தை உணர்ந்து கோபமடைந்து அந்த இளைஞரைத் தாக்க முயன்று உறுமுகிறது.

இதைக் கண்ட அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர், பயந்து பின்வாங்கி ஓடுகிறார். அதிர்ஷ்டவசமாக, இந்தச் சம்பவத்தில் அவருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. இளைஞரைத் துரத்திய பிறகு, சிங்கம் மீண்டும் தனது இரையிடம் திரும்பிச் சென்றுவிடுகிறது.

சமூக வலைதளங்களில் கண்டனம்

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதும், நெட்டிசன்கள் மத்தியில் கடும் கண்டனத்திற்குள்ளானது. பலரும், "அந்த இளைஞர் ஆபத்துடன் விளையாடுகிறார்" என்று கருத்துத் தெரிவித்தனர். மேலும், "சமூக வலைத்தளங்களில் வைரலாவதற்காக மக்கள் இப்படி அபாயகரமான செயல்களைச் செய்வது, மிகவும் மோசமான எடுத்துக்காட்டு" என்றும் பலரும் விமர்சித்தனர்.

இந்தச் சம்பவம், மனிதர்களின் உயிருக்கு மட்டுமன்றி, வனவிலங்குகளின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என பலரும் சுட்டிக்காட்டினர். "சிங்கம் அந்த இளைஞரைத் தாக்கியிருந்தால், பாதுகாப்புக் காரணங்களுக்காக சிங்கம் கொல்லப்பட்டிருக்கும்" என்று கவலை தெரிவித்த நெட்டிசன்கள், இதுபோன்ற பொறுப்பற்ற செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் வனவிலங்குப் பாதுகாப்பு விதிகளை மீறும் செயல் என்றும், சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.