இந்தியா

உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்.. குடிபோதையில் ஒரு வயது மகனை கொலை செய்த கொடூர தந்தை!

By Christon
05 Oct 2025, 06:06 PM
உத்தரப் பிரதேசத்தில் குடிபோதையில் இருந்த நபர் தனது ஒரு வயது மகனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் குடிபோதையில் இருந்த தந்தை தனது ஒரு வயது மகனைக் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தின் பின்னணி

பலியா மாவட்டத்தை சேர்ந்த தம்பதி ரூபேஷ் திவாரி - ரீனா திவாரி. ரூபேஷ் திவாரி அடிக்கடி குடித்துவிட்டு தனது மனைவி ரீனாவை அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார். நேற்று (செப்.04) மாலை ரூபேஷ் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும், அவர் தனது தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பயந்துபோன ரீனா, தனது மாமனாருடன் பக்கத்து கிராமத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, அவர்களது ஒரு வயது மகன் கினுவையும், மூன்று வயது மகள் அனன்யாவையும் வீட்டிலேயே விட்டுச் சென்றுள்ளார்.

சிறுவன் கொலை

இந்த நிலையில், ரீனா வீடு திரும்பியபோது, தனது கணவன் ரூபேஷ் திவாரி கூர்மையான கத்தியால் மகனைக் கொடூரமாக கொலை செய்தது தெரியவந்துள்ளது. மகனின் உடலை பார்த்து கதறி அழுத ரீனா, பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, ரூபேஷ் திவாரி மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர் உடனடியாகக் கைது செய்தனர்.