Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

உ.பி-யில் அதிர்ச்சி: ராக்கி கட்டிய சகோதரி.. அண்ணன் செய்த கொடூர செயல்!

By Christon
13 Aug 2025, 05:19 PM
ராக்கி கட்டிய சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.
ரக்ஷா பந்தன் அன்று தனது கையில் ராக்கி கட்டிய 14 வயது உறவுக்காரச் சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற 33 வயது அண்ணன், போலீஸ் விசாரணையில் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை & கொலை

உத்தரப் பிரதேசத்தின் அவுரையா மாவட்டத்தைச் சேர்ந்த சுர்ஜித் (33), ரக்ஷா பந்தன் அன்று காலை தனது மாமாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, அவரது 14 வயது உறவுக்காரச் சகோதரி, சுர்ஜித்துக்கு ராக்கி கட்டியுள்ளார். அதே இரவில், மது அருந்திவிட்டு போதையில் மீண்டும் அந்த வீட்டிற்குச் சென்ற சுர்ஜித், தூங்கிக்கொண்டிருந்த அந்தச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் கொலை செய்துள்ளார். தனது குற்றத்தை மறைக்க, அவர் சிறுமியின் உடலைத் தூக்கில் தொங்கவிட்டு, அது ஒரு தற்கொலை போலக் காட்ட முயற்சி செய்துள்ளார்.

அடுத்த நாள் காலை, தனது மகள் தூக்கில் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தந்தை, உடனடியாக போலீசாருக்குத் தகவல் கொடுத்தார்.

சந்தேகத்தை ஏற்படுத்திய ரத்தக்கறை

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அறையில் பல இடங்களில் ரத்தக்கறைகள் இருப்பதைக் கண்டனர். இதனால், இது தற்கொலை அல்ல, கொலைதான் என்று அவர்கள் உடனடியாகத் தெரிந்துகொண்டனர்.

இதையடுத்து, குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியபோது, சுர்ஜித் எப்போதும் அவர்களுடனேயே இருந்துள்ளார். அவர்களிடம் கேள்விகள் கேட்டபோது, சுர்ஜித்தான் எல்லாவற்றுக்கும் பதிலளித்துள்ளார். இது போலீசாருக்கு அவர் மீது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

பின்னர், சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அந்த அறிக்கையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சுர்ஜித்தைக் கைது செய்து விசாரித்தபோது, அவர் தான் இந்தக் கொடூரமான குற்றத்தைச் செய்ததை ஒப்புக்கொண்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.