Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி.. 3-வது மனைவியால் முதியவருக்கு நேர்ந்த கொடூரம்!

By Christon
07 Sep 2025, 04:06 PM
திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த தனது 60 வயது கணவரை, காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம், அனூப்பூர் மாவட்டத்தில் உள்ள சக்காரியா கிராமத்தில், சாக்கு மற்றும் போர்வையில் சுற்றப்பட்ட நிலையில், பையாலா ராஜ் (60) என்பவரின் சடலம் கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், 3வது மனைவி அவரை கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.

சம்பவத்தின் பின்னணி

பையாலா ராஜ் மூன்று முறை திருமணம் செய்துள்ளார். அவரது இரண்டாவது மனைவிக்கு குழந்தைகள் இல்லாததால், அவரது இளைய சகோதரியான முன்னியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தபோதிலும், முன்னிக்கு நாராயண தாஸ் குஷ்வாஹா என்ற உள்ளூர் நிலத்தரகருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார்.

கொலைச் சம்பவம்

இந்த உறவுக்கு இடையூறாக இருந்த பையாலா ராஜை கொலை செய்ய முன்னியும், அவரது காதலன் நாராயண தாஸும் திட்டமிட்டுள்ளனர். இதற்கு, தீரஜ் கோல் என்ற 25 வயது கூலித் தொழிலாளியையும் உடந்தையாக இருந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 30 அன்று, பையாலா ராஜ் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவு 2 மணியளவில் லல்லுவும், தீரஜும் வீட்டிற்குள் நுழைந்து, இரும்புக் கம்பியால் அவரது தலையில் பலமாக அடித்து கொலை செய்துள்ளனர். பின்னர், அவரது உடல் சாக்கு மற்றும் போர்வையில் சுற்றப்பட்டு, கயிறு மற்றும் சேலைகளால் கட்டப்பட்டு, கிராமத்தில் உள்ள கிணற்றில் வீசப்பட்டது.

விசாரணை மற்றும் கைது

மறுநாள் காலை, பையாலா ராஜின் இரண்டாவது மனைவி குடி பாய், கிணற்றில் மிதந்த உடலைப் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து, கிணற்றில் இருந்து பையாலா ராஜின் உடல் மற்றும் அவரது செல்போனை மீட்டனர். பிரேதப் பரிசோதனையில், தலையில் பலத்த காயம் காரணமாக அவர் இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் நடந்த 36 மணி நேரத்தில் கொலையாளிகளை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பையாலா ராஜ்ஜை அவரது மூன்றாவது மனைவி முன்னி, அவரது காதலன் நாராயண தாஸ் குஷ்வாஹா மற்றும் கூலித் தொழிலாளி தீரஜ் கோல் ஆகியோர் சேர்ந்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, குற்றவாளிகள் மூவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.