Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

ஆண் நண்பருடன் பேசியதால் ஆத்திரம்.. மகளை அடித்துக் கொன்ற கொடூர தந்தை!

By Christon
05 Nov 2025, 04:40 PM
உத்தரப் பிரதேசத்தில் ஆண் நண்பருடன் நீண்ட நேரம் செல்போனில் பேசியதால் ஆத்திரமடைந்த தந்தை, தனது மகளை அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில், தனது மகள் நண்பருடன் செல்போனில் பேசியதைக் கண்டித்து, ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற தந்தை ஒருவர், மகளைக் கம்பால் அடித்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தின் பின்னணி

உத்தரப் பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் உள்ள சூட்னேரா கிராமத்தைச் சேர்ந்தவர் 50 வயதுடைய நூர் முகமது. இவர் தனது மகள் ரூபியை, ஆண் நண்பர் ஒருவருடன் செல்போனில் பேசக் கூடாது என்று தொடர்ந்து கண்டித்து வந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாகத் தந்தைக்கும் மகளுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

தாக்குதலும் கொலையும்

தந்தையின் கட்டளையை மீறி ரூபி தொடர்ந்து நண்பருடன் பேசியதால், ஆத்திரமடைந்த நூர் முகமது, ரூபியின் செல்போனை உடைத்து வீசியுள்ளார்.

இந்த நிலையில், நேற்று (நவ.4) மதியம் மீண்டும் செல்போன் குறித்துத் தந்தைக்கும் மகளுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. வாக்குவாதம் உச்சக்கட்டத்தை அடைந்தபோது, நூர் முகமது கோபத்தில் கம்பை எடுத்து ரூபியை கடுமையாகத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த ரூபி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் கைது நடவடிக்கை

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அந்த இடத்திற்கு வந்து, ரூபியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், தலைமறைவான தந்தையைத் தேடியபோது, நூர் முகமது கிராமத்திலேயே ஒரு இடத்தில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. அவரை உடனடியாகக் கைது செய்த போலீசார், தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.