இந்தியா

ம.பி. துர்கா சிலை கரைப்பு விபத்து.. 10 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழப்பு!

By Christon
02 Oct 2025, 09:33 PM
மத்தியப் பிரதேசத்தில் துர்கா தேவி சிலை கரைப்பு ஊர்வலத்தின்போது நடந்த விபத்துகளில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் துர்கா தேவி சிலை கரைப்பு ஊர்வலத்தின்போது நடந்த இரண்டு விபத்துகளில் சுமார் 10 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

உஜ்ஜைனில் ஆற்றில் கவிழ்ந்த டிராக்டர்

உஜ்ஜைன் அருகே உள்ள இங்கோரியா பகுதியில், பக்தர்கள் நிறைந்த ஒரு டிராக்டர்-டிரெய்லர் கட்டுப்பாட்டைக் கடந்து சம்பல் ஆற்றுக்குள் விழுந்தது. 12 வயது சிறுவன் தவறுதலாக டிராக்டரை இயக்கியதால், வாகனம் முன்னோக்கிச் சென்று ஆற்றில் கவிழ்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில், மொத்தம் 12 குழந்தைகள் ஆற்றில் விழுந்த நிலையில், உள்ளூர் மக்கள் 11 குழந்தைகளை மட்டுமே மீட்டனர். மீட்கப்பட்ட குழந்தைகளில் இரண்டு பேர் சிகிச்சையின்போது உயிரிழந்தனர், மேலும் ஒரு குழந்தையைக் காணவில்லை. காணாமல்போன குழந்தையைத் தேடும் பணியில் போலீஸ் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் (SDRF) ஈடுபட்டுள்ளனர்.

காண்ட்வாவில் குளத்தில் கவிழ்ந்த டிரெய்லர்

காண்ட்வா மாவட்டத்தில் உள்ள பாந்தனா வட்டத்தில், கிராம மக்கள் சிலை கரைப்பதற்காகச் சென்றபோது, அவர்கள் பயணித்த டிராக்டர்-டிரெய்லர் குளத்தில் கவிழ்ந்தது. அதிக பாரம் ஏற்றப்பட்டிருந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இந்த விபத்தில், அதிகாரிகள் இதுவரை 8 சிறுமிகளின் உடல்கள் உள்பட 11 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். மேலும் பலர் காணாமல் போயிருக்கலாம் என்று அஞ்சப்படுவதால், நீச்சல் வீரர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

முதல்வர் நிவாரணம்

இந்தச் சம்பவங்களை "மிகவும் சோகமானது" என்று குறிப்பிட்ட முதலமைச்சர் மோகன் யாதவ் இரங்கல் தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.