இந்தியா

Jagdeep Dhankhar resigns: குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா

By Jayakumar
22 Jul 2025, 07:16 AM
குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரெளதிபதி முர்முவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு குடியரசுத் துணைத் தலைவராக 74 வயதான ஜெகதீப் தன்கர் பொறுப்பேற்றார். இந்தியாவின் 14வது குடியரசுத் துணைத் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.

ஜெகதீப் தன்கர்

ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுன் மாவட்டத்தில் உள்ள கிதான் என்ற கிராமத்தில் 1951ம், ஆண்டு மே18ம் தேதி விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஜெகதீப் தன்கர். பட்டப்படிப்பினை ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள கல்லூரியில் முடித்தார். விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர் ராஜஸ்தான் மாநில ஒலிம்பிக் கூட்டமைப்பு, ராஜஸ்தான் டென்னிஸ் அமைப்புகளின் தலைவராக இருந்துள்ளார்.

கடந்த 1989ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது பிரதமர் சந்திரசேகர் ஆட்சியில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சராக பதவி வகித்தார். பின்னர் 2019ம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து 2022ல் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

வரலாற்றில் முக்கியத்தும் வாய்ந்த சகாப்தம்

இது குறித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு அவர் கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், “மருத்துவ ரீதியான காரணங்களுக்காக குடியரசு துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து நான் விலகுகிறேன். எனது பணியில் நான் கவனம் செலுத்த எனக்கு ஆதரவு கொடுத்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த பணியின் மூலம் நான் பெற்ற அனுபவங்கள் மகத்தானது. இந்த பணி காலத்தில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்தையும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிவேக வளர்ச்சியை கண்டுள்ளது. அதில் பங்கேற்றதை நான் பாக்கியமாக கருதுகிறேன். தேசத்தின் வரலாற்றில் முக்கியத்தும் வாய்ந்த இந்த சகாப்தத்தில் பணி செய்ததை கெளரவமாக கருதுகிறேன். இந்த நேரத்தில் உலகளாவிஉஅ எழுச்சி மற்றும் தனித்துவமான சாதனைகளை எண்ணி பெருமிதம் கொள்கிறேன். அதன் எதிர்காலத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை கொண்டிருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.