Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

'Friday' ஸ்பெல்லிங் 'Farday'-ஆ? வைரலாகும் ஆசிரியரின் வீடியோ!

By Christon
19 Nov 2025, 01:06 PM
சத்தீஸ்கரில் உள்ள ஓர் அரசுப் பள்ளி ஆசிரியர் மாணவர்களுக்கு எழுத்து பிழையுடன் பாடங்களை தவறாகக் கற்றுக்கொடுக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
குழந்தைகள் கல்வி கற்று, பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்புகிறார்கள். ஆனால், சத்தீஸ்கரில் உள்ள ஓர் அரசுப் பள்ளியின் ஆசிரியரே அடிப்படைப் பாடங்களைக்கூடத் தவறாகக் கற்றுக்கொடுக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி, பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

தவறான எழுத்துகளைக் கற்பித்த ஆசிரியர்

சத்தீஸ்கரில் உள்ள கோக்வார் என்ற இடத்தில் இருக்கும் ஒரு தொடக்கப்பள்ளியில் நடந்த இந்தச் சம்பவம் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு வகுப்பில் ஆசிரியர் மாணவர்களுக்கு வாரத்தின் நாட்களை ஆங்கிலத்தில் மனப்பாடம் செய்யச் சொல்லிக் கொடுத்தார். ஆனால், அவர் கரும்பலகையில் எழுதிய ஆங்கில வார்த்தைகள் முற்றிலும் தவறாக இருந்தன.

உதாரணமாக, Friday என்பதற்குப் பதிலாக “Farday” என்றும், Saturday என்பதற்குப் பதிலாக “Saterday” என்றும் எழுதியிருந்தார். தவறுகளை அறியாத குழந்தைகளும் அவர் கற்றுக்கொடுத்தபடியே திரும்பத் திரும்பச் சொன்னார்கள். இதுபோலவே, உடல் உறுப்புகளைக் கற்றுக்கொடுக்கும்போதும், Nose என்பதற்குப் பதிலாக “noge” என்றும், Ear என்பதற்குப் பதிலாக “eare” என்றும், Eye என்பதற்குப் பதிலாக “iey” என்றும் அவர் எழுதிக் காண்பித்தார். அதுமட்டுமின்றி, தாய், தந்தை, சகோதரன், சகோதரி போன்ற எளிய குடும்ப உறவுப் பெயர்கள்கூடத் தவறாகவே எழுதப்பட்டிருந்தன. Father, Mother, Sister போன்ற வார்த்தைகளை அவர் “Farder”, “mader”, “sester” என்று எழுதிக் கற்பித்தார். மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலை நம்பி, அந்தத் தவறான வார்த்தைகளைக் கவனமாகக் நோட்புக்குகளில் எழுதினர்.

பள்ளியின் அவல நிலையும் புகாரும்

அந்தத் தொடக்கப் பள்ளியில் 42 குழந்தைகள் படித்து வருவதாகவும், அவர்களுக்குக் கல்வி கற்பிக்க இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இரண்டு ஆசிரியர்களில் ஒருவரான கமலேஷ் பாண்டோ என்பவர் அடிக்கடி குடித்துவிட்டுப் பள்ளிக்கு வந்து வகுப்பறையிலேயே தூங்குவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மற்ற ஆசிரியர் வழக்கமாக இதுபோலத் தவறான எழுத்துகளைக் மாணவர்களுக்கு கற்பிக்கிறார்.

இந்தப் பிரச்னைகள் குறித்துக் கிராம மக்கள் பலமுறை கல்வித் துறை மற்றும் பஞ்சாயத்து அதிகாரிகளை அணுகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆசிரியர் தவறாகக் கற்பிக்கும் இந்த வைரல் வீடியோ குறித்து தற்போது அதிகாரிகள் கவனத்துக்கு சென்றுள்ளது. "ஊடகங்கள் மூலம் தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணை அறிக்கை மற்றும் உண்மைகள் உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்படும்" என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.