இந்தியா

குடும்பப் பிரச்னை: மூன்று குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை.. தெலங்கானாவில் பயங்கரம்!

By Christon
05 Sep 2025, 10:43 AM
ஆந்திராவை சேர்ந்த நபர் குடும்ப தகராறு காரணமாக தனது மூன்று குழந்தைகளையும் கொன்ற, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப தகராறு காரணமாக ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயது நபர் ஒருவர், தனது மூன்று குழந்தைகளையும் கொன்ற, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடையாளம் தெரியாத ஆண் உடல்

தெலுங்கானா மாநிலம், வேல்தண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அடையாளம் தெரியாத ஆணின் உடல் ஒன்று கிடப்பதாக, அப்பகுதியினர் நேற்று முன்தினம் (செப்.3) காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் அந்த உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இந்த நிலையில் முதற்கட்ட விசாரணையில், அவர் ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த புத்தா வெங்கடேஸ்வர் என்பது தெரியவந்தது.

மேலும், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது, அந்த நபர் மூன்று குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்ததற்கான காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில், நேற்று நாகர்கர்னூல் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில், அந்த நபரின் 8 மற்றும் 6 வயதுடைய இரண்டு மகள்களும், 4 வயது மகனும், பாதி எரிந்த நிலையில் சிதைந்த சடலங்களாக மீட்கப்பட்டனர்.

மனைவியுடன் தகராறு- போலீசார் விசாரணை

இதையடுத்து, காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், குடும்பப் பிரச்னை காரணமாக தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி அந்த நபர் தனது மூன்று குழந்தைகளையும் இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு நாகர்கர்னூலுக்கு வந்ததாகத் தெரியவந்துள்ளது. மேலும், அவர் மூன்று குழந்தைகளையும் கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு, பின்னர் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதையடுத்து அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, அவர்கள் ஏற்கனவே காணவில்லை என புகார் அளித்திருந்ததும் தெரியவந்தது. மேலும், கணவன் மற்றும் 3 குழந்தைகள் உயிரிழந்ததை அறிந்த மனைவி தீபிகா கதறி அழுதுள்ளார். இச்சமபவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.