இந்தியா

நீதிமன்றத்தில் அரிசி வீசி இடையூறு.. டாக்டருக்கு ஒருநாள் சிறை தண்டனை!

By Christon
16 Aug 2025, 05:43 PM
டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது, அரிசியை வீசி இடையூறு செய்த நபருக்கு ஒரு நாள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தபோது, வேண்டுமென்றே அரிசியை வீசி நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய ஒரு அறுவை சிகிச்சை நிபுணருக்கு, நீதிமன்றம் அன்றைய நாள் முழுவதும் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

வழக்கு விசாரணை - அரிசியை வீசி இடையூறு

கடந்த ஆகஸ்ட் 11 அன்று கூடுதல் அமர்வு நீதிபதி ஷெஃபாலி பர்னாலா டாண்டன் முன்னிலையில் விசாரணை நடந்துகொண்டிருந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவரான டாக்டர் சந்தர் விபாஸ் வேண்டுமென்றே நீதிமன்றத்தின் தரையில் அரிசியைத் தூவி இடையூறு ஏற்படுத்தினார்.

இதைக் கண்ட வழக்கறிஞர்கள், அது செய்வினை (black magic) எனச் சந்தேகப்பட்டதால், துப்புரவுப் பணியாளர் வரும் வரை நீதிமன்ற நடவடிக்கைகள் 15-20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டன. அப்போது, நீதிபதி தரையில் உள்ள அரிசியை சுத்தம் செய்யுமாறு குற்றம் சாட்டப்பட்டவருக்கு உத்தரவிட்டார்.

நீதிபதி கண்டனம்

நீதிமன்ற நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியபோது, நீதிபதி தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்தார். "நீதிமன்றம் என்பது நீதியைக் கோரும் மற்றும் வழங்கும் புனிதமான இடம். அதன் கண்ணியத்தைப் பேணுவது மிகவும் அவசியம். குற்றம் சாட்டப்பட்டவரின் இத்தகைய செயல் நீதித்துறையின் அடித்தளத்தையே அச்சுறுத்துகிறது" என்று குறிப்பிட்டார்.

மேலும், படித்தவரான ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் இப்படி நடந்து கொண்டது அதிர்ச்சியாக உள்ளதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

மன்னிப்பும் தண்டனையும்

இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவர் தனது தவறை உணர்ந்து மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அவரது மன வருத்தத்தைக் கருத்தில் கொண்டு, அன்றைய நாள் நீதிமன்றம் முடியும் வரை சிறைத் தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.