இந்தியா

நீதித்துறை குறித்து சர்ச்சைப் பாடம்: மன்னிப்பு கோரியது NCERT!

By Christon
26 Feb 2026, 01:38 PM
மத்தியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (NCERT) வெளியிட்டுள்ள எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற சர்ச்சை கருத்துகளுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அந்தப் பாடத்தை நீக்கி NCERT மன்னிப்புக் கோரியுள்ளது.
மத்திய அரசின் 8-ஆம் வகுப்பு NCERT பாடப்புத்தகத்தில் 'நீதித்துறையில் ஊழல்' என்ற புதிய தலைப்பில் சில கருத்துகள் இடம்பெற்றிருந்தன. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், நாட்டின் தலைமை நீதிபதி சூர்யகாந்த் இதற்குத் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

தலைமை நீதிபதியின் எச்சரிக்கை

நீதித்துறையின் தலைவராகப் பேசிய தலைமை நீதிபதி சூர்யகாந்த், "நீதிமன்றத்தை அவமதிக்க நினைப்பவர்களை எப்படி கையாள வேண்டும் என்பது எனக்குத் தெரியும். இதில் தவறு செய்தவர்கள் எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தாலும், சட்டம் தனது கடமையைச் செய்யும். இது ஒரு திட்டமிட்ட சதி போலத் தோன்றுகிறது" என்று மிகுந்த காட்டத்துடன் தெரிவித்தார். நீதித்துறையின் மாண்பைக் குலைக்கும் வகையில் இத்தகைய தகவல்கள் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது ஏற்கத்தக்கதல்ல என்று தெரிவித்தார்.

NCERT மன்னிப்பும் பாட நீக்கமும்

உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கடுமையான நிலைப்பாட்டைத் தொடர்ந்து, NCERT நிர்வாகம் உடனடியாக மன்னிப்புக் கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "8-ஆம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் நீதித்துறை குறித்துத் தவறான தகவல்கள் இடம்பெற்றது எதிர்பாராமல் நடந்த ஒரு தவறு. இதற்காக நாங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். நீதித்துறையை நாங்கள் எப்போதும் உயர்வாக மதிக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சர்ச்சைக்குரிய அந்தப் பாடம் முழுமையாக நீக்கப்படும் என்றும், வரும் 2026-27 புதிய கல்வியாண்டிற்குள் திருத்தப்பட்ட புதிய பாடம் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும் NCERT உறுதி அளித்துள்ளது.