Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

ராட்வீலர், பிட்புல்ஸ் நாய் இனங்களுக்கு தடை - அமைச்சரவை ஒப்புதல்!

By VASUKI
11 Jul 2025, 06:56 AM
ராட்வீலர், பிட்புல்ஸ் உள்ளிட்ட நாய் இனங்களை வளர்ப்பதற்கு தடை விதிக்கும் மசோதாவிற்கு கோவா அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
கோவா மாநிலத்தில் ராட்வீலர் (Rottweiler), பிட்புல் (Pitbull) போன்ற 'அதிக ஆபத்தான' என கூறப்படும் நாய் இனங்களை வளர்ப்பது முற்றாகத் தடை செய்யும் மசோதாவிற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த வகை நாய் இனங்களை வைத்திருப்பவர்கள் அவற்றை கருத்தடை செய்து கால்நடை பராமரிப்புத் துறையில் பதிவு செய்ய வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

சமீபகாலமாக மக்கள் மீது நாய்கள் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்ததை அடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ராட்வீலர், பிட்புல் போன்ற நாய்கள் இயற்கையாகவே தாக்கும் தன்மை கொண்டவை என்றும், அவற்றின் செயல்கள் முற்றிலும் கணிக்க முடியாதவையாக இருக்கக்கூடும் என்றும் விலங்குப் பாதுகாப்பு மற்றும் கால்நடை பராமரிப்பு துறைகள் தெரிவித்துள்ளன.

கோவா மாநில கால்நடை பராமரிப்பு துறை இந்த புதிய விதிமுறைகளை அமல்படுத்தும் பொறுப்பில் இருக்கும். இந்த இன நாய்களை வளர்ப்பதற்கான உரிமம் இனிமேல் வழங்கப்படமாட்டாது என்றும், மீறுபவர்கள் மீது தண்டனை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இம்மசோதா சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இது பொதுமக்கள் பாதுகாப்புக்காக தேவையான நடவடிக்கை என வரவேற்றுள்ள நிலையில், மற்றவர்கள் நாய்களின் இனதன்மை அல்லாது, உரிமையாளர்களின் பயிற்சி மற்றும் அவர்களுக்கு தான் நாய்களை வளர்ப்பதில் அதிக முக்கியத்துவம் என வாதிடுகின்றனர்.

இதே போன்று, மற்ற மாநிலங்களும் இதே மாதிரியான கட்டுப்பாடுகளை எதிர்காலத்தில் கொண்டு வர வாய்ப்பு இருப்பதாக விலங்கு நல ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

.