இந்தியா

சவுதி அரேபியா: டேங்கர் லாரி மீது மோதிய பேருந்து; 42 இந்தியர்கள் பலி என தகவல்!

By Christon
17 Nov 2025, 11:30 AM
சவுதி அரேபியாவில் டீசல் டேங்கர் மீது பேருந்து மோதிய விபத்தில் இந்தியர்கள் 42 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவில் டீசல் டேங்கர் லாரி மீது பேருந்து மோதிய கோர விபத்தில், உம்ரா புனிதப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த 42 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்துக்குள்ளானபோது பேருந்தில் இருந்தவர்கள் பெரும்பாலும் தூங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

விபத்து மற்றும் உயிரிழப்புகள்

இந்தியாவில் இருந்து உம்ரா புனிதப் பயணம் மேற்கொண்ட பக்தர்கள் மெக்காவில் இருந்து மதீனாவுக்குச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது மதீனாவுக்கு 160 கி.மீ. தொலைவில் உள்ள முஃப்ரிஹாத் என்ற இடத்தில் நள்ளிரவு 1.30 மணியளவில் (இந்திய நேரப்படி) டீசல் டேங்கர் லாரியின் மீது பேருந்து எதிர்பாராதவிதமாக மோதியுள்ளது.

பயணிகள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், விபத்து ஏற்பட்டவுடன் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் 42 இந்தியர்கள் பலியாகியுள்ளதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலியானவர்களில் பெரும்பாலும் ஐதராபாத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் நிலையில், 20 பெண்கள் மற்றும் 11 குழந்தைகளும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணிகள் மற்றும் நிலைமை

மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்தை அடைவதற்குள் பேருந்து முழுவதும் எரிந்து நாசமாகிவிட்டதாகவும், தீக்காயம் காரணமாக உடல்களை அடையாளம் காண்பது கடினம் என்றும் சவுதி மீட்புப் படையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், அவரின் நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா அரசின் நடவடிக்கை

இந்த விபத்து தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தெலங்கானா முதல்வர் அலுவலகம், "இந்த விபத்தில் சிக்கிய தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள் குறித்த தகவல்களைச் சேகரிக்கத் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்," என்று குறிப்பிட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் நடந்த பேருந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதற்காகத் தெலங்கானா மாநில அரசு வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் சவுதி தூதரகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.

இதுதொடர்பாகப் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தகவல்களைத் தெரிந்துகொள்ள உதவும் வகையில், தெலங்கானா தலைமைச் செயலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. உறவினர்கள் 79979 59754, 99129 19545 என்ற எண்களை தொடர்புகொண்டு தகவல் மற்றும் உதவி பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.