இந்தியா

7 வயது சிறுமிக்கு கிட்டாரை பரிசாக வழங்கிய அமித்ஷா- எதற்காகத் தெரியுமா?

By MUTHUKRISHNAN
17 Mar 2025, 04:19 PM
மிசோரமை சேர்ந்த இளம் பாடகி எஸ்தர் ஹ்னாம்டே, கடந்த 2020 ஆம் ஆண்டில் "மா துஜே சலாம்" என்ற பாடலினை பாடிய வீடியோ வைரலானதே தொடர்ந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

ஏ.ஆர்.ரகுமானின் இசையில் உருவான வந்தே மாதரம் ஆல்பத்தில் இடம்பெற்றிருந்த "மா துஜே சலாம்" பாடல் இந்தியாவின் பட்டித் தொட்டிகளிலும் ஹிட் அடித்த பாடல் எனலாம். அந்த பாடலை கேட்கும் ஒவ்வொரு கனமும் தேசப்பற்று நாடி நரம்புகளில் தெறித்து ஓடுவது போல் இருக்கும். முன்னதாக அந்த பாடலை எஸ்தர் பாடிய வீடியோ ஒன்று இணையத்தில் ஹிட் அடிக்க பெரும் புகழ் பெற்றார். அரசு மற்றும் சிறப்பு நிகழ்வுகளில் “மா துஜே சலாம்” பாடலை தொடர்ந்து பாடியும் வருகிறார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வடகிழக்கு மாநிலங்களில் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, ​​ஐஸ்வால் பகுதியில் நடைப்பெற்ற நிகழ்வில் வந்தே மாதரத்தை மனதாரப் பாடி 7 வயது மிசோரம் மாநில சிறுமி எஸ்தர் லால்துஹாவ்மி ஹ்னாம்டே அனைவரது மனதையும் கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து மாணவிக்கு கிட்டார் ஒன்றினை பரிசாக அளித்துள்ளார் அமித் ஷா.

இதுத்தொடர்பாக தனது X வலைத்தளத்தில் மாணவி பாடிய “மா துஜே சலாம்”  காணொளியுடன், மாணவியின் திறமையினை புகழ்ந்து பதிவு ஒன்றினை போட்டுள்ளார் அமித்ஷா. அப்பதிவில், “பாரதத்தின் மீதான அன்பு நம் அனைவரையும் ஒன்றிணைக்கிறது. மிசோரமின் அதிசய குழந்தை எஸ்தர் லால்துஹாவ்மி ஹ்னாம்டே ஐஸ்வாலில் வந்தே மாதரம் பாடலைப் பாடுவதைக் கேட்டு மிகவும் நெகிழ்ச்சியடைந்தேன். பாரத மாதா மீதான ஏழு வயது சிறுமியின் அன்பு அவளது பாடலில் வெளிப்பட்டது, அவளது குரலில் பாடலை கேட்பது மயக்கும் அனுபவமாக இருந்தது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமித்ஷா பதிவிட்டுள்ள பதிவின் கீழ், பலரும் சிறுமியின் திறமையினை பாராட்டி வருகின்றனர்.