Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

மதம் மாற கட்டாயப்படுத்திய காதலன்.. இளம் பெண் விபரீத முடிவு!

By Christon
11 Aug 2025, 05:45 PM
மதம் மாற கூறி காதலன் கட்டாயப்படுத்தியதால் 23 வயது பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். திருமணத்திற்காக மதமாற்றம் செய்யும்படி வற்புறுத்தியதால், அவர் தற்கொலை செய்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, அவரது காதலனைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தற்கொலைக்குக் காரணம்?

எர்ணாகுளம் மாவட்டம், கோதமங்கலத்தைச் சேர்ந்த சோனா எல்டோஸ் என்ற மாணவி, கடந்த 9 ஆம் தேதி அன்று தனது வீட்டில்தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆரம்பத்தில், தற்கொலை வழக்காகப் பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் சோனா எழுதியதாகக் கூறப்படும் ஒரு கடிதத்தைக் கைப்பற்றினர். அதில், மதமாற்றம் தொடர்பாக, அவர் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.

சோனா, தனது காதலன் ரமீஸ் மற்றும் அவனது குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோர் தன்னை மதமாற்றம் செய்யும்படி கட்டாயப்படுத்தியதாக அந்தக் கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார். திருமணம் செய்து கொள்வதற்காக ரமீஸ் தன்னை வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், அப்போது இஸ்லாம் மதத்திற்கு மாறினால் மட்டுமே திருமணம் செய்து வைக்க முடியும் என்று அவரது குடும்பத்தினர் கூறியதாகவும் சோனா குறிப்பிட்டுள்ளார்.

குடும்பத்தினர் குற்றச்சாட்டு

மேலும், சோனாவின் தாயார் பிந்து அளித்த பேட்டியில், ரமீஸின் குடும்பத்தினர் தங்கள் மகளை மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதாகக் கூறினார். ஆரம்பத்தில் சோனா காதலால் இதற்கு ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் பின்னர் ரமீஸ் ஒரு கடத்தல் வழக்கில் சிக்கியதால் தனது முடிவை மாற்றிக்கொண்டதாகவும் பிந்து தெரிவித்தார். மேலும், கடத்தல் வழக்கு நிலுவையில் இருந்தபோதும் கூட, சோனா ரமீஸை திருமணம் செய்யத் தயாராக இருந்ததாகவும், ஆனால் மதமாற்றத்திற்கு மட்டும் மறுத்துவிட்டதாகவும் அவர் கூறினார். மேலும், சோனா ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டு ரமீஸின் குடும்பத்தாரால் கொடூரமாக தாக்கப்பட்டதாகவும் அவரது சகோதரர் கூறியுள்ளார்.

காவல்துறையின் விசாரணை

இதையடுத்து, சோனாவின் தற்கொலைக் கடிதத்தின் அடிப்படையில், காவல்துறையினர் ரமீஸை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதம் மாற்ற கட்டாயப்படுத்தியதால் இளம் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எல்லா பிரச்சனைகளுக்கும் தற்கொலை தீர்வல்ல. மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம். மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்).