Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

நடுரோட்டில் அமர்ந்து டீ குடித்த இளைஞர்.. வீடியோ வைரலானதால் நேர்ந்த சோகம்

By nagalekshmi
19 Apr 2025, 08:50 AM
பெங்களூரில் நடுரோட்டில் அமர்ந்தபடி டீ குடித்து இளைஞர் ஒருவர் ரீல்ஸ் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் மத்தியில் தற்போது இன்ஸ்டாகிராம் மோகம் அதிகரித்து வருகிறது. தனது இன்ஸ்டாகிராம் பாலோவர்ஸ்களை (Followers) அதிகரிப்பதற்காக தினமும் வீடியோ அல்லது புகைப்படங்களை எடுத்து தங்களது கணக்குகளில் பதிவிட்டு வருகின்றனர். இதற்காக நடுரோட்டில் இருந்து ரீல்ஸ் செய்வது, ஆபத்தை உணராமல் ரயில் தண்டவாளங்களில் இருந்து ரீல்ஸ் செய்வது என பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரீல்ஸ் மோகம் பலரது உயிர்களையும் காவு வாங்கியுள்ளது. போக்குவரத்திற்கு இடையூறாகவோ, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையிலோ ரீல்ஸ்கள் செய்வதை தவிர்க்குமாறு காவல்துறை தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் பலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

அந்த வகையில், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் 25 வயதான சரக்கு வாகன ஓட்டுநர் பிரசாந்த் என்பவர் பரபரப்பான சாலையின் நடுவில் நாற்காலியை போட்டு அதில் அமர்ந்து தேநீர் குடித்தவாறு ரீல்ஸ் செய்துள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில் போக்குவரத்திற்கு இடையூறாக செயல்பட்ட பிரசாந்தை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பிரசாந்த், நந்தினி லேஅவுட்டில் பகுதியில் வசித்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பாலோவர்ஸ்களை (Followers) அதிகரிக்கும் நோக்கில் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும், பிரசாந்த் ஜாமினில் விடுவிக்கப்பட்டதாகவும் அவருக்கு 5,000 ரூபாய் வரை நீதிமன்றம் அபராதம் விதிக்கலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், இதுபோன்று போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ரீல்ஸ் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனக்கு தெரியாது என பிரசாந்த் தெரிவித்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர். வைரலான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கிய பிரசாந்த் இதுபோன்ற செயல்களில் இனி ஈடுபட மாட்டேன் என உறுதியளித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.