இந்தியா

டெல்லியில் கோயிலுக்குள் நடந்த கொடூர சம்பவம்.. பெண் கைது!

By Christon
15 Dec 2025, 01:17 PM
டெல்லியில் உள்ள ஒரு கோயிலில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் மன்சரோவர் பார்க் பகுதியில் உள்ள ஒரு கோயிலுக்குள் 48 வயதுப் பெண் ஒருவர் நேற்று கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் அஞ்சல் சாக்சேனா என்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவிலில் நடந்த கொடூரத் தாக்குதல்

மன்சரோவர் பார்க் பகுதியைச் சேர்ந்த குசும் ஷர்மா (48) என்பவர், நேற்று டி.டி.ஏ. குடியிருப்புகள் வளாகத்தில் உள்ள ஒரு கோயிலில் வழிபாடு செய்துகொண்டிருந்தார். அப்போது திடீரென 2 பெண்கள் அவரை கத்தியால் தொடர்ச்சியாக குத்தியுள்ளனர். இதனை கண்ட பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், குசும் ஷர்மாவை உடனடியாக மருத்துவமனைக்குக் அழைத்து சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

முக்கிய குற்றவாளி கைது

இதனை தொடர்ந்து, முக்கியக் குற்றவாளியான அஞ்சல் சாக்சேனா என்ற பெண்ணைக் காவல்துறை கைது செய்தது. இதுகுறித்து துணை ஆணையர் பிரசாந்த் கௌதம் வெளியிட அறிக்கையில், "கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட அஞ்சல் சாக்சேனா உட்பட இரண்டு நபர்கள் சேர்ந்து குசும் ஷர்மாவைத் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.

கொலைக்கான சரியான நோக்கம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை என்றாலும், இது முன்விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது" என்றார். மேலும், கைது செய்யப்பட்ட அஞ்சல் சாக்சேனாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.