ஐபிஎல் 2025

IPL 2025: கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத் தொகை இவ்வளவா..?

By nagalekshmi
24 Mar 2025, 08:15 AM
2025-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 20 கோடி ரூபாயும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 13 கோடி ரூபாயும் வழங்கப்பட உள்ளது.

18-வது ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த சீசனில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெறும். இறுதிப்போட்டி மே 25-ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும். ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின்  3வது லீக் போட்டியான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டி நேற்று (மார்ச் 23) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய  மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 156 ரன்னை இலக்காக நிர்ணயித்து களமிறங்கிய சென்னை அணி 19.1 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. 

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பணக்கார லீக்குகளில் ஒன்றாக இருந்து வருகிறது. அதாவது, இந்த போட்டியின் ஒளிபரப்பு மற்றும் ஸ்பான்சர்ஷிப் காரணமாக மட்டுமல்லாமல், இந்தப் போட்டியில் வழங்கப்படும் பரிசுத் தொகையாலும் இது பணக்கார கிரிக்கெட் லீக்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அதாவது, ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு மிகப்பெரிய பரிசு வழங்கப்படவுள்ளது.

இந்த ஆண்டு வெற்றி பெறும் அணிக்கு 20 கோடி ரூபாயும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 13 கோடி ரூபாயும் வழங்கப்படும். முன்னதாக கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக பரிசுத் தொகை பாதியாக குறைக்கப்பட்டது. அப்போது வெற்றி பெற்ற அணிக்கு 10 கோடி ரூபாயும், இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு 6 கோடியே 25 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது.