Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

“இரண்டாவது திருமணத்தில் விருப்பமில்லை”: வதந்திகளுக்கு நடிகை மீனா முற்றுப்புள்ளி!

By Christon
16 Sep 2025, 02:21 PM
இரண்டாவது திருமணம் குறித்துப் பரவிய வதந்திகளால் தான் மற்றும் தன் குடும்பத்தினர் மிகுந்த மனவேதனைக்கு ஆளானதாக நடிகை மீனா தெரிவித்துள்ளார்.
தனது கணவர் இறந்த பிறகு, இரண்டாவது திருமணம் குறித்துப் பரவிய வதந்திகளால் தான் மற்றும் தன் குடும்பத்தினர் மிகுந்த மனவேதனைக்கு ஆளானதாக நடிகை மீனா தெரிவித்துள்ளார். தற்போது தனது முழு கவனமும் மகள் நைனிகா மீது மட்டுமே உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மீனாவின் திரையுலகப் பயணம்

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா, குழந்தை நட்சத்திரமாக 'அன்புள்ள ரஜினிகாந்த்' திரைப்படத்தில் அறிமுகமானார். பின்னர், 'வீரா', 'எஜமான்', 'முத்து' போன்ற படங்களில் ரஜினிகாந்த்துடன் ஜோடி சேர்ந்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு என இதுவரை 120-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது குணச்சித்திர வேடங்களிலும், நிகழ்ச்சிகளிலும் நடித்து வருகிறார்.

கணவர் மரணம் மற்றும் வதந்திகள்

மீனாவிற்கும் வித்யா சாகர் என்பவருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு, மீனாவின் கணவர் வித்யா சாகர் நுரையீரல் தொற்று காரணமாக தனது 48-வது வயதில் காலமானார்

வித்யா சாகர் இறந்த சில மாதங்களிலேயே, நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக வதந்திகள் வேகமாகப் பரவின. இந்த வதந்திகள் மீனாவையும், அவரது குடும்பத்தினரையும் ஆழமாகப் பாதித்ததாக அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

மனம் திறந்த மீனா

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மீனா, தன்மீது பரவிய வதந்திகள் குறித்துப் பேசுகையில், "என் கணவர் இறந்ததும் நான் இன்னொரு திருமணம் செய்துகொண்டதாகப் பரவிய வதந்திகளால் நானும் என் குடும்பமும் கடுமையான மனவேதனைக்கு ஆளானோம். எனக்கு இரண்டாவது திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை. இப்போது, என் கவனம் முழுவதும் என் மகள் நைனிகா மீதுதான் உள்ளது" எனத் தெரிவித்தார். மற்ற நடிகர்களுடன் தன்னை இணைத்து வந்த இத்தகைய செய்திகள், தனக்கும் தனது குடும்பத்திற்கும் பெரும் துயரத்தை அளித்ததாகவும் அவர் கூறினார்.