சினிமா

திரைப்படத்தில் இருந்து தூக்கியதால் இயக்குநர்-கதாநாயகிக்கு அடி, உதை.. போலீசார் விசாரணை

By nagalekshmi
11 Apr 2025, 07:47 PM
திரைப்படத்தில் இருந்து தூக்கியதால் ஆத்திரமடைந்த பெண் தனது நண்பர்களுடன் இயக்குநர் மற்றும் கதாநாயகியை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வளசரவாக்கம் சுரேஷ் நகரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் 'செஞ்சி அம்மன்' என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தை தமீம் அன்சாரி என்பவர் இயக்கி வருகிறார். 'செஞ்சி அம்மன்' திரைப்படத்தில் முதலில் கதாநாயகியாக நடித்தவர் ரஜியா என்ற ஐஸ்வர்யா. ஆனால் அவரது செயல்பாடுகள் சரியில்லை என்று கூறி படத்தில் இருந்து இயக்குநர் தமீம் அன்சாரி நீக்கி விட்டதாக தெரிகிறது.

இதன் பின்னர் ராஜேஸ்வரியை கதாநாயகியாக நடிக்க வைத்து வருவதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரஜியா அடிக்கடி இயக்குநர் தமீம் அன்சாரி சந்தித்து பிரச்சனை செய்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று இரவு வளசரவாக்கத்தில் உள்ள திரைப்பட இயக்குநர் தமீம் அன்சாரி அலுவலகத்திற்கு ரஜியா தனது நண்பர்களான காயத்ரி, ஆரிப் என்பவர்களுடன் சென்றார். அங்கு கதாநாயகியாக நடித்து வரும் ராஜேஸ்வரியும் இருந்துள்ளார்.

அப்போது "தன்னை ஏன் படத்தில் இருந்து நீக்கினீர்கள்" என கேட்டு ரஜியா இயக்குநர் தமீம் அன்சாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அது முற்றிப்போய் ரஜியா தனது நண்பர்களுடன் சேர்ந்து இயக்குநர் தமீம் அன்சாரி, கதாநாயகி ராஜேஸ்வரி ஆகியோரை அடித்து உதைத்து விட்டு தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது. மேலும் அலுவலகத்தில் இருந்த லேப்டாப், நாற்காலிகளை உடைத்து விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ராஜேஸ்வரி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.