Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

‘ஆட்டி’ பட ட்ரெய்லர் வெளியீடு: கள்ளச்சாராய மரணங்களுக்கு நிதி, ராணுவ வீரனுக்கு ஒன்றுமில்லை- சீமான்

By Christon
23 Aug 2025, 04:40 PM
கள்ளச்சாராயம் குடித்து செத்தவனுக்கு 10 லட்சம், ஆனால் எல்லையில் உயிரை விட்ட வீரனுக்கு ஒன்றுமில்லை” என்று ஆட்டி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சீமான் ஆவேசமாக பேசினார்.
லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரித்து, நடித்துள்ள திரைப்படம் ‘ஆட்டி’. 'மேதகு ; பாகம் 1’ மற்றும் 'சல்லியர்கள்’ படங்களை இயக்கிய தி.கிட்டு இயக்கியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சாலிகிராமத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், எழுத்தாளர் சுகா, தயாரிப்பாளர் கசாலி, இயக்குனர் திருமுருகன் உட்பட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு டிரைலரை வெளியிட்டனர்.

சீமான் பேச்சு

விழாவில் பேசிய சீமான், “இயக்குநர் கிட்டுவிடம் இயல்பிலேயே நல்ல படைப்பாற்றல் உண்டு. பல கோடி பட்ஜெட்டில் கதையில்லாமல் படம் எடுப்பவர்கள் மத்தியில், ஒன்றரை கோடியில் ஆகச்சிறந்த படத்தை எடுக்கும் திறமை கொண்டவர்.

'எங்கள் குடியில் பெண்கள் முதலாம்’ என்பதற்கு மாற்றுக்கருத்து இருக்க முடியாது. நமது மூதாதையர் ஆண்டதற்கான வரலாற்றுச் சான்றுகள் மிகக் குறைவு. இலக்கியத்தில் கண்ணகியை வீர மங்கையாக சித்தரிக்கும் அதே நேரத்தில், வரலாற்றில் நிஜமாகவே வேலு நாச்சியார் ஒரு 'ஆட்டி'யாக ஆட்டிப் படைப்பவளாக இருந்திருக்கிறார். உண்மையில் ‘ஆட்டி’ என்றால் அவர்தான். ஆனால் அவருக்கு சிவகங்கையில் ஒரு சிறிய சிலை மட்டுமே இருக்கிறது.

வேலு நாச்சியார் மறைந்து 85 வருடங்கள் கழித்து வடநாட்டில் உருவானவர்தான் ஜான்சி ராணி. அவரை வடநாட்டின் வேலு நாச்சியார் என்று அழைப்பதற்குப் பதிலாக, வேலு நாச்சியாரை தென்னாட்டின் ஜான்சி ராணி என்று அழைப்பதன் மூலம், வரலாற்றை பிழையாக எழுத முயற்சி செய்திருக்கிறார்கள். இப்படித்தான் நம் வரலாறு கொஞ்சம் கொஞ்சமாக அழிய ஆரம்பித்தது.

தாய் மொழியைப் பேசத் தெரியாத இனம் வாழாது. தமிழில் கையெழுத்து போட்டால் படிக்கத் தெரியாதவர்கள் என்று முத்திரை குத்தி விடுகிறார்கள். கள்ளச்சாராயம் குடித்து செத்தவனுக்கு 10 லட்சம். விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்றவனுக்கு ஒரு கோடி. ஆனால் எல்லையில் உயிரை விட்ட வீரனுக்கு ஒன்றுமில்லை. அப்படி என்றால் தன் மரணத்திற்கு பின் தன் வீட்டை நாடு பார்த்துக் கொள்ளும் என்று எந்த நம்பிக்கையுடன் ஒருவன் ராணுவத்தில் பணியாற்ற கிளம்பி வருவான்?

புரட்சி என்பது ஒவ்வொரு மனிதனின் காலடிக்கு கீழே காய்ந்த சருகுகளாக காத்துக் கிடக்கிறது. ஒரு தீக்குச்சியின் உரசல் போதும். அப்படி உரசிப்போடும் ஒரு தீக்குச்சியாக, தம்பி கிட்டுவின் 'ஆட்டி' படைப்பு இருக்கட்டும் என்று நான் வாழ்த்துகிறேன்” என்றார்.

இயக்குநர் கிட்டு பேச்சு

விழாவில் பேசிய இயக்குநர் கிட்டு, “’மேதகு’ திரைப்படத்தின் திரையிடலின்போது அண்ணன் இசக்கி கார்வண்ணனுடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. அப்படித்தான் இந்த படத்தை இயக்கும் வாய்ப்பை எனக்குக் கொடுத்திருக்கிறார். என்னிடம் ஏதோ ஒன்று இருக்கிறது என்று மற்றவர்களுக்கு அடையாளப்படுத்தியது நாம் தமிழர் கட்சிதான். ஒரு ஊர் தலைவியையோ அல்லது குடும்பத் தலைவியையோதான் 'ஆட்டி' என்று சொல்வார்கள்.

தமிழர்களுக்கு அதிகப்படியான பெண் குலதெய்வங்கள் இருக்கின்றன. அதற்கான காரணத்தைத் தேடிச் செல்லும்போது மிகப்பெரிய வரலாற்று உண்மை தெரிய வருகிறது. இந்தக் குலதெய்வங்களை மையப்படுத்திதான் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த நிகழ்ச்சிக்கு அண்ணன் சீமான் வருவாரா என்று ஒரு சந்தேகம் ஏற்பட்டபோது, அவர் நிச்சயம் வருவார் என ஒரு குரல் கேட்டது. சொன்னாலும் செல்லாவிட்டாலும் எங்கள் இனத்திற்கு அவர் தான் கடவுள்.

வழக்கம்போல இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு போட்டுப் பார்த்தபோது ஏதோ ஒன்று குறைவது போல இருந்தது. அப்போது என்னுடன் பயணித்து வரும் திரைக்கதை ஜாம்பவான் திருமுருகன் இந்த விஷயத்தை அழகாக மாற்றிவிட்டார். குறிப்பாக, படத்தின் கடைசி அரை மணி நேரம் பரபரவென்று இருக்கும்” என்றார்.