சினிமா

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு எதிரான வழக்கு.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

By Christon
06 Apr 2026, 04:16 PM
பிரபல திரைப்பட இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு எதிராகத் தொடரப்பட்ட வருமான வரித்துறை வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரபல திரைப்பட இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு எதிராகத் தொடரப்பட்ட வருமான வரித்துறை வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஃபோட்டான் கதாஸ் (Photon Kathaas) தயாரிப்பு நிறுவனம் கடந்த 2013-14 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, அந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக இருந்த கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் மீது வருமான வரித்துறை கடந்த 2019-ல் வழக்குத் தொடர்ந்திருந்தது. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கவுதம் மேனன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பு வாதம்

இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கவுதம் மேனன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரேவதி மணிவண்ணன், "இயக்குநர் கவுதம் மேனன் கடந்த 2011-ஆம் ஆண்டிலேயே ஃபோட்டான் கதாஸ் நிறுவனத்தின் இயக்குனர் பதவியிலிருந்து விலகிவிட்டார். இந்தத் தகவல் முறையாகக் கம்பெனிகள் பதிவாளரிடமும் (ROC) தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர் பதவியில் இல்லாத 2013-14 காலகட்டத்திற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்தது செல்லாது" என வாதிட்டார்.

நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி இளந்திரையன், குறிப்பிட்ட நிதியாண்டுக்கு முன்பே கவுதம் மேனன் பதவியிலிருந்து விலகிவிட்டதை உறுதிப்படுத்தினார். இதனால் அவருக்கு எதிரான வழக்கை மட்டும் ரத்து செய்து உத்தரவிட்டார். அதே சமயம், இந்த நிறுவனத்தின் மற்ற இயக்குநர்களுக்கு எதிரான வழக்கை எழும்பூர் நீதிமன்றம் விரைந்து முடிக்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.