சினிமா

Parking-ஆல் வந்த பிரச்சனை.. நீதிபதி மகனை தாக்கிய நடிகர் தர்ஷன்

By nagalekshmi
04 Apr 2025, 09:36 AM
நடிகர் தர்ஷன் தனது நண்பர்களோடு சேர்ந்து தாக்கியதாக காவல்நிலையத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ரியாலிட்டி ஷோ மூலமாக பிரபலமானவர் தர்ஷன் தியாகராஜன். இவர் கூகுள் குட்டப்பா, நாடு ஆகிய படங்களில் நடித்துள்ளார். சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் வசித்து வரும் நடிகர் தர்ஷன் தனது வீட்டின் அருகே காரை பார்க் செய்துவிட்டு டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது காரை பார்க்கிங் செய்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதி மகன் ஆதிசூடி, பெண் உறவினர் மற்றும் நடிகர் தர்ஷன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் பெண் மற்றும் நீதிபதியின் மகன் உள்ளிட்ட இருவரை வாக்குவாதத்தின் போது நடிகர் தர்ஷன் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கியதாக தெரிகிறது. தாக்குதலுக்கு உள்ளான இருவரும் அண்ணாநகர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் . மேலும், அவர்கள் ஜெஜெ நகர் காவல் நிலையத்தில் இச்சம்பவம் தொடர்பாக நடிகர் தர்ஷன் மற்றும் அவரது நண்பர்கள் மீது புகார் அளித்துள்ளனர்.

அதேபோல் நடிகர் தர்ஷன் தரப்பிலும் ஜெஜெ நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஜெஜெ நகர் போலீஸார், நடிகர் தர்ஷன் மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தினர். இருதரப்பு புகார் குறித்தும் விசாரணை நடத்தி வருவதாகவும், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே நடிகர் தர்ஷன் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை சனம் ஷெட்டி, அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.