Latest News

மதிமுக அலுவலத்தில் தாக்குதல்.. மர்ம நபரை பிடித்து போலீசார் விசாரணை

By Jayakumar
16 Jun 2025, 08:49 PM
தீயணைப்புத்துறை வீரர் என்று கூறி மதிமுக அலுவலகத்திற்குள் சென்று பொருட்களை சேதப்படுத்திய மர்ம நபரை பிடித்து எழும்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை, எழும்பூர் பகுதியில் அமைந்துள்ள மதிமுக தலைமை அலுவலகத்திற்கு தீயணைப்புத்துறை சீருடையில் சென்ற நபர் ஒருவர், "பாம்பு வந்ததாக தனக்கு அழைப்பு வந்தது. எங்கே பாம்பு? நான் பாம்பு பிடிக்க வேண்டும்" எனக் கூறி கட்டை எடுத்து உள்ளே சென்றுள்ளார்.

"நாங்கள் யாரும் அழைக்கவில்லையே" என மதிமுக அலுவலகத்தில் கூற ஆத்திரமடைந்த அந்த நபர் மேலே ஓடிக் கொண்டிருந்த சீலிங் ஃபேனை கட்டையால் அடித்துள்ளார். அதில் ஒரு இறக்கை வளைந்தந்து. மேலும், அந்த நபர் அங்கிருந்த பொருட்களையும் கட்டையால் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து எழும்பூர் போலீசார் விரைந்து சென்று அந்த நபரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.எந்த கேள்விக்கும் சரிவர பதிலளிக்காத அவர், தான் தீயணைப்பு துறை சார்ந்த அல்போன்ஸ் என கூறியுள்ளார். மேலும், மனநலம் பாதிக்கப்பட்டது போல பேசி வருகிறார் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? உண்மையிலேயே தீயணைப்புத் துறையில் பணிபுரிகிறாரா? என்பது குறித்து எழும்பூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆளுங்கட்சி கூட்டணியில் இருக்கும் மதிமுக அலுவலகத்திற்குள் நுழைத்து மர்ம நபர் பொருட்களை சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.