Kumudam News 24 X 7 AMP Article
உலகம்

“பாகிஸ்தான் அமைதியை விரும்பவில்லை” - இந்திய ராணுவம் விளக்கம்

By Jayakumar
08 May 2025, 04:29 PM
லாகூரில் உள்ள பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு சாதனம் அழிக்கப்பட்டுள்ளது என இந்திய ராணுவம் விளக்கம்
இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து பயங்கரவாதிகளை பிடிக்கும் பணியில் இந்திய ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. பயங்கரவாதிகளுக்கு உதவியதாக 2 இளைஞர்களை சமீபத்தில் கைது செய்தது.

மேலும் ஒரு இளைஞர் விசாரணைக்கு பயந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்பட்டது. இந்தநிலையில் பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேற்று முன் தினம் நள்ளிரவு 1 மணியளவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 70 கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாக்.சதி முறியடிப்பு

இந்த தாக்குதலுக்கு இந்திய தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து நேற்று இரவு பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரத்தை நோக்கி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. முன்னெச்சரிக்கையாக இருந்த இந்திய ராணுவம் அதை முறியடித்துள்ளது. இருப்பினும் அத்துமீறி ஜம்மு காஷ்மீரில் உள்ள சில இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தான் அமைதியை விரும்பவில்லை. ஆபரேஷன் சிந்தூர்"-ன் இலக்கு பாகிஸ்தான் ராணுவம் இல்லை என தெளிவுப்படுத்தி இருந்தோம், இருப்பினும் பாகிஸ்தான் ராணுவம் ஸ்ரீநகர், ஜம்மு உள்ளிட்ட 12 இடங்களில் ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்திய ராணுவம் விளக்கம்

பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 5 குழந்தைகள் உட்பட 16 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு பதற்றம் அதிகரிக்காத வகையில், இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது. லாகூரில் உள்ள பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு சாதனம் அழிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்திய ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் பாகிஸ்தானின் லாகூர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் அடுத்தடுத்த தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் ராணுவம் திணறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.