டெல்லியில் மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில், பாஜக தலைமையிலான டெல்லி அரசு புதிய மின்சார வாகன கொள்கையை அறிவித்துள்ளது. இந்த கொள்கையின் கீழ் பொதுமக்களுக்கு பல்வேறு மானிய சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மூன்று சக்கர மின்சார வாகனம் (E-Rickshaw உள்ளிட்டவை) வாங்குவோருக்கு ரூ.50,000 வரை மானியம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் குறைந்த வருமானம் கொண்டோர் மற்றும் தொழிலாளர்கள் மின்சார வாகனங்களை எளிதாக வாங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மின்சார இருசக்கர வாகனங்கள் (E-Bike / E-Scooter) வாங்குவோருக்கு ரூ.30,000 வரை மானியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில் இந்த திட்டம் முக்கியமானதாக கருதப்படுகிறது.
அத்துடன், இ-பைக் திட்டத்திற்கான கூடுதல் ஊக்கத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் ஆண்டில் ரூ.30,000, இரண்டாம் ஆண்டில் ரூ.20,000, மூன்றாம் ஆண்டில் ரூ.10,000 என கட்டமாக மானியம் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி அரசின் இந்த புதிய மின்சார கொள்கை நகரத்தில் மின்சார வாகன பயன்பாட்டை அதிகரித்து, காற்று மாசுபாட்டை குறைக்கும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.