Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

இளைஞர் லாக்கப் மரணம்: வீடியோ எடுத்தவர் பாதுகாப்பு கேட்டு மனு

By Jayakumar
03 Jul 2025, 01:42 PM
மடப்புரம் கோவில் இளைஞர் அஜித்குமாரை காவலர்கள் அடுத்து துன்புறுத்தும் வீடியோவை எடுத்த ஊழியருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக கூறி டிஜிபியிடம் பாதுகாப்பு கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் கோவிலில் பணிபுரியும் ஊழியர் சத்தீஸ்வரன், காவலாளி அஜித்குமாருக்கு காவல்துறையினரால் செய்யப்பட்ட சித்திரவதை சம்பவத்தை ரகசியமாக வீடியோ எடுத்ததும், அதனை நீதிமன்றத்தில் ஆவணமாக சமர்ப்பித்ததும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த வீடியோ காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் முக்கிய ஆதாரமாக அமைந்தது.

வீடியோ வைரல்

இந்த வழக்கில் இதுவரை ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தனிப்படை காவலர் ராஜா என்பவர் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர். இவர் கடந்த காலத்தில் சரித்திர குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர் என்றும், அவர் நேரடியாக சத்தீஸ்வரனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து சத்தீஸ்வரன் காவல்துறை தலைவருக்கு எழுத்துப்பூர்வமாக மனு அளித்துள்ளார். அதில் தற்போது தாம் திருப்புவனம் பகுதியில் வசிப்பதால், அங்கு உள்ள காவல்துறையினரிடம் நம்பிக்கை இல்லை என தெரிவித்துள்ளார். எனவே திருப்புவனத்தைச் சாராத மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய போலீசாரால் 24 மணி நேரமும் முழு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாதுகாப்பு கேட்டு மனு

உண்மை கூறியதற்காக சத்தீஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதே இந்த மனுவின் நோக்கமாகும். இது வழக்கின் முக்கிய சாட்சிக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் சாட்சிகளின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.