Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

"போலீசை வீட்டிற்குள் பூட்டி வைத்த பெண்"- சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

By Christon
06 Mar 2026, 02:59 PM
சென்னையில் மதுபோதையில் பெண் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்த காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவரது வீட்டிற்குள், நேற்று இரவு சீருடையில் இருந்த காவலர் ஒருவர் மதுபோதையில் அத்துமீறி நுழைந்துள்ளார். அந்தப் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததோடு, தவறான உள்நோக்கத்துடன் படுக்கையறைக்குச் சென்று அநாகரீகமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், காவலரை வீட்டிற்குள்ளேயே வைத்து வெளிப்பக்கமாகப் பூட்டிவிட்டு காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார்.

விசாரணையில் அம்பலமான உண்மைகள்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஐஸ் ஹவுஸ் போலீசார், பூட்டிய கதவைத் திறந்து பார்த்தபோது உள்ளே இருந்தது அதே காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் சூர்யா (2017 பேட்ச்) என்பது தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட பெண் மீது ஏற்கனவே மதுபாட்டில்கள் மற்றும் போதை மாத்திரைகள் விற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட காவலர் சூர்யா, நேற்று காலை விசாரணை நடத்துவது போல அந்தப் பெண் வீட்டிற்குச் சென்று வந்துள்ளார்.

மதுபோதையில் அத்துமீறல்

மீண்டும் இரவு நேரத்தில் மதுபோதையில் அங்கு சென்ற காவலர் சூர்யா, அந்தப் பெண்ணிடம் அநாகரீகமாகப் பேசியுள்ளார். அப்போது அந்தப் பெண் சமயோசிதமாகக் காவலரின் செயல்களைத் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அவர் சட்டையைக் கழற்றி அத்துமீற முயன்றபோது, லாவகமாக வெளியே வந்து கதவைப் பூட்டியுள்ளார். விசாரணையில் காவலர் சூர்யா தனது மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருவதும் உறுதி செய்யப்பட்டது.

துறைரீதியான நடவடிக்கை

இச்சம்பவம் குறித்து மயிலாப்பூர் துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, காவலர் சூர்யாவை சஸ்பெண்ட் செய்து கூடுதல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், அவர் மீது சட்டப்படியான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.