தமிழ்நாடு

ஆபாச வார்த்தைகளால் திட்டிய பைனான்ஸ் ஊழியர்கள்.. அவமானத்தால் சோக முடிவு

By leninakathiya
08 Nov 2024, 12:47 AM
பைனான்ஸ் கம்பெனி ஊழியர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதால். அவமானத்தால் மனம் உடைந்த பெண் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரத்தை அடுத்த வாணியங்குளம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் அவரது மனைவி ராக்கமுத்து. இவர் அதே பகுதியில் கூலி தொழில் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவர்களுக்கு ஐடிஐ படிக்கும் மகன் ஒருவர் உள்ள நிலையில், தங்களுடைய குடும்பத் தேவைக்காக ராக்கமுத்து அந்தப் பகுதியில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிடம் கடனுக்கு பணம் பெற்றதாக கூறப்படுகிறது.

வாங்கிய கடனை கட்ட முடியாமல் மற்றொரு கடன், அதனை செலுத்த மேலும் ஒரு கடன் என ராக்கமுத்துவின் கடன்தொகை அதிகரித்துள்ளது. இதனால், கடன் கொடுத்தவர்கள் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்ததால் மனமுடைந்த ராக்கமுத்து வீட்டில் பூச்சி மருந்தை குடித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். கடன் தொல்லையால் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழகத்தில் பொதுமக்கள் கடன் நெருக்கடி பிரச்னையால் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாக உள்ளது. வங்கி மற்றும் நிதி நிறுவனத்தினர் கடனை வசூலிக்கும் நடவடிக்கையாக, கடன் வாங்கியவர்களையும் அவர்களின் குடும்பத்தாரையும் அவதூறாக பேசுவதும் குண்டர்களை கொண்டு‌ மிரட்டுவதும் நடப்பதாக பரவலாக புகார்கள் வருகின்றன. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் பொதுமக்கள் உயிரை மாய்த்துக் கொள்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுகிறது.

ராமநாதபுரம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களை வரைமுறைப்படுத்தாததன் காரணமாக எண்ணற்ற சிக்கல்கள் இன்றைய குடும்பச் சூழல்களில் ஏற்பட்டிருக்கிறது என்பதுவே நிதர்சனமான உண்மை. 

அது மட்டுமல்லாது சொற்ப கடன் பெற்று கழுத்தை நெரிக்கும் கடனில் வந்து நிற்கும் அபலை பெண்களின் நிலைமை, வெளியில் சொல்ல முடியாத நிலையில் உள்ளது. எனவே, மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களை மத்திய மாநில அரசுகள் கட்டுப்படுத்த வரைமுறைப்படுத்த வேண்டும் என்பதே ஏராளமான நடுத்தர மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.