Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்கள் காசாவைப் பற்றிக் கவலைப்படுவது ஏன்? - முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த அண்ணாமலை!

By VASUKI
08 Oct 2025, 03:09 PM
காசா இனப்படுகொலையைக் கண்டித்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலினின் கருத்தை டேக் செய்து, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
காசாவில் நடக்கும் இனப்படுகொலையைக் கண்டித்துச் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய கருத்துகளுக்கு, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சிபிஎம் சார்பில் இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், இஸ்ரேலின் நடவடிக்கைகளைக் கண்டித்துப் பேசினார். காசாவில் உலகமே பார்க்க இஸ்ரேல் நடத்தி வரும் அப்பட்டமான மனித உரிமை மீறல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது; உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டியது!

உலகின் மிகப் பெரும் ஜனநாயகமான இந்தியா இந்த விவகாரத்தில் கண்மூடி இருக்கக் கூடாது. பாலஸ்தீனத்தைத் தொடக்கத்திலேயே அங்கீகரித்த கொள்கையுடைய இந்தியா, மீண்டுமொருமுறை வரலாற்றில் சரியான முடிவை எடுக்க வேண்டிய நேரம் இது. இதற்காக ஒன்றிய அரசை வலியுறுத்தி, வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே தீர்மானம் கொண்டுவரப்படும்! மனிதம் காப்போம்," என அவர் தெரிவித்தார்.

அண்ணாமலையின் விமர்சனம்

முதல்வரின் இந்தப் பதிவை மேற்கோள் காட்டி (Tag) பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிலளித்தார்.கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காசாவைப் பற்றிய கவலை எதற்கு முதல்வர் ஸ்டாலின் அவர்களே? உள்ளூர் நிலைமையே ஊசலாடும் போது உலக அரசியல் உங்களுக்குத் தேவைதானா? என்று கேள்வி எழுப்பினார்.

பாலஸ்தீனத்திற்கு விடிவு காலம் பிறக்க வேண்டும் எனப் பேசும் உங்களால் வேங்கைவயல் போன்ற கொடுமைகளில் இருந்து மக்களை விடுவிக்க முடியவில்லையே ஏன்? கள்ளக்குறிச்சியில் மக்களைக் காவு கொடுத்த நீங்கள் காசாவிற்கு கருணை காட்டச் சொல்வது ஆகச் சிறந்த நகைச்சுவை, என அண்ணாமலை ஆவேசமாக விமர்சித்துள்ளார்.