Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

பிரபல ரவுடி ரோஹித் ராஜை சுட்டுப்பிடித்த பெண் எஸ்.ஐ... யார் இந்த கலைச்செல்வி?..

By leninakathiya
13 Aug 2024, 10:45 PM
துணிச்சலுடன் செயல்பட்டு ரவுடியை துப்பாக்கியால் சுட்ட  உதவி ஆய்வாளர் கலைச்செல்வியை சென்னை போலீஸ் கமிஷனர் அருண் நேரில் வரவழைத்து பாராட்டியுள்ளார்.

சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ரோகித் (எ) ரோகித் ராஜ். பிரபல ரவுடியான இவர் மீது பிரபல ரவுடிகள் சிவகுமார், தீச்சட்டி முருகன், ஆறுமுகம் ஆகியோரை கொலை செய்த வழக்கு உட்பட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த 3 வழக்குகளிலும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த ரவுடி ரோகித் ராஜிற்கு (Rowdy Rohit Raj) நீதிமன்றம் மூன்று முறை பிடிவாரண்டு கொடுத்துள்ளது.

ஆனால் அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதற்கிடையே அவர்  கீழ்ப்பாக்கம் பழைய கல்லறை பகுதியில் பதுங்கிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து டி.பி சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கலைச்செல்வி (SI Kalaiselvi) தலைமையிலான தனிப்படை போலீசார், அங்கு சென்று ரோஹித் ராஜை பிடிக்க முயன்றனர்.

இதை படித்தீர்களா..: பெண்ணின் மார்பகத்தில் முருகன் டாட்டூ.. அல்லோலகல்லோலப்பட்ட சமூக வலைதளம்..

அப்போது அவர் அருகில் இருந்த பீர்பாட்டிலை உடைத்து தலைமைக்காவலர்கள் சரவணக்குமார், பிரதீப் ஆகிய இருவரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயற்சித்துள்ளார். உடனே உதவி ஆய்வாளர் கலைச்செல்வி எச்சரிக்கை செய்து பிடிக்க முற்பட்ட போது, அவரையும் தாக்க முயன்றுள்ளார்.

இதனால் கலைச்செல்வி, தற்காப்பிற்காக துப்பாக்கியால் ரோகித் ராஜின் கால் முட்டியின் கீழ் சுட்டு பிடித்துள்ளார். இதில் காயம் அடைந்த ரோகித் ராஜ், மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் காயம் அடைந்த தலைமைக்காவலர்கள் சரவணக்குமார், பிரதீப் ஆகியோரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் சென்னையில் இன்று அதிகாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், துணிச்சலுடன் செயல்பட்டு ரவுடியை துப்பாக்கியால் சுட்ட  உதவி ஆய்வாளர் கலைச்செல்வியை சென்னை போலீஸ் கமிஷனர் அருண் நேரில் வரவழைத்து பாராட்டியுள்ளார்.

மேலும் படிக்க: கோடிக்கணக்கில் மோசடி.. தனியார் தொலைக்காட்சி நிறுவனர் தேவநாதன் கைது..

அதாவது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு கலைச்செல்வியை இன்று காலை நேரில் வரவழைத்த போலீஸ் கமிஷனர் அருண், கலைச்செல்வியின் துணிச்சலை மனம் திறந்து பாராட்டியதுடன், அவருக்கு வெகுமதி வழங்கியும் கெளரவித்துள்ளார். உதவி ஆய்வாளர் கலைச்செல்வியின் துணிச்சலை பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டு வருகின்றனர்.

யார் இந்த கலைச்செல்வி:

2011ஆம் ஆண்டு பேட்ச் நேரடி காவல் உதவி ஆய்வாளரான கலைசெல்வி தேனியைச் சேர்ந்தவர். தமிழ்நாடு காவல் பணியில் தேர்வாகி முதன்முதலில் சென்னை தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார்.

அதன் பின்பு சேத்துபட்டு, அபிராமபுரம், கோட்டூர்புரம், அயனாவரம், கிழக்கு சைபர் கிரைம் ஆகிய நிலையங்களில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து தற்போது டி.பி சத்திரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணி புரிந்து வருகிறார்.

மேலும் படிக்க: சசிகலா, தினகரன், ஓபிஎஸ்... வெளியில் தெரியாமல் இபிஎஸ் உடன் பேச்சுவார்த்தை.. கே.சி.பழனிசாமி அப்டேட்

இவர் அயனாவரத்தில் பணிபுரிந்த போது அயனாவரம், ஆனந்த விநாயகர் கோவில், இரண்டாவது தெருவில் நீண்ட காலமாக குடிநீர் பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில் மக்களின் குடிநீர் பிரச்சனையை புரிந்துகொண்ட உதவி ஆய்வாளர் கலைச்செல்வி தனது சொந்த பணத்தில் 2020 ம் ஆண்டு அடிகுழாய் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் பிரச்சனை தீர ஏற்பாடு செய்தார். இதனால் அயனாவரம் பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். இந்த சேவையால் தமிழ்நாடு காவல்துறை உதவி ஆய்வாளர் கலைச்செல்வியை வெகுவாக பாராட்டியது.