தமிழ்நாடு

அஜித்குமாருக்கு ஆதரவாக களம் இறங்கும் விஜய்.. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரி தவெக மனு!

By VASUKI
01 Jul 2025, 11:36 PM
எழும்பூர், காவல் ஆணையர் அலுவலகம், ஆர்பாட்டம், சிவகங்கை, அஜித்குமார்,த.வெ.க சார்பில் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் காவல் நிலைய வழக்கில் உயிரிழந்த அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு த.வெ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளதாகவும் அதற்கு அனுமதி கேட்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் கோவில் நகை ஒன்று காணாமல் போனதாக விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட காவலாளி அஜித்குமார் தனிப்படை போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

இதில் ஆறு நபர்கள் உடனடியாக பணியிட நீக்கம் செய்யப்பட்ட நிலையில் 5 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர் ஆனால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது அவர்களை காப்பாற்றும் நோக்கத்துடன் உள்ளதாக கூறி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வருகின்ற மூன்றாம் தேதி காலை 10 மணி அளவில் எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதற்காக அனுமதி கேட்டு தமிழக வெற்றி கழகத்தின் துணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வருகை தந்தார் மனு அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுவரை தமிழகத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வந்தாலும் இவ்வளவு கொடூரமான சம்பவங்களை யாரும் கேட்டிருக்க மாட்டார்கள். 24 லாக் அப் மரணங்கள் நடைபெற்றுள்ளன.

இந்த அரசு இது குறித்து எந்த ஒரு செவி சாய்க்காமல் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து வருகிறது. இதில் உயர் அதிகாரிகள் ஒருவர் தெரிவித்ததன் அடிப்படையிலேயே விசாரணைக்கு அழைத்து சென்று அடித்ததாக காவலர்கள் தெரிவித்துள்ள நிலையில் யார் அந்த அதிகாரி என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் மாற்றம் செய்யப்பட்ட எஸ்பி மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்திருந்தாலும் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டி இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டியும் தமிழக வெற்றி கழகம் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவதாகவும் அதற்காக அனுமதி கேட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தமிழக வெற்றி கழகம் சார்பாக எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் இங்கு காவல்துறை சார்பாக அனுமதி என்பது இதுவரை வழங்கப்படவில்லை இந்த விவகாரத்திலாவது தமிழக வெற்றி கழகம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி கிடைக்கும் என நம்புகிறோம் அப்படி அனுமதி கிடைக்க பட்சத்தில் தலைவர் விஜய் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பாக அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.