தமிழ்நாடு

விஜய் கூட்டத்தில் பரபரப்பு: பெண்ணிடம் செயின் பறித்த வடமாநிலத்தவருக்கு தர்ம அடி!

By Christon
20 Sep 2025, 05:35 PM
நாகையில் நடைபெற்ற விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வடமாநில இளைஞருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று நாகை மாவட்டம், புத்தூர் அண்ணா சிலை அருகே அவர் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் அங்கு திரண்டனர்.

'கூட்டத்தை பயன்படுத்தி செயின் பறிப்பு'

இந்தக் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் கூட்டத்தில் நின்றிருந்த பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த சுமார் 4 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துள்ளார். செயினை இழந்த அந்தப் பெண் உடனடியாக சத்தமிட, சுதாரித்துக்கொண்ட அருகில் இருந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அந்த நபரைப் பிடித்து சரமாரியாகத் தாக்கி, காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், காலை முதலே 10-க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் புத்தூர் ரவுண்டானா பகுதியில் அமர்ந்திருந்ததாகவும், இந்தக் கூட்டத்தைக் குறிவைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட அவர்கள் காத்திருந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர். பரபரப்பான மக்கள் கூட்டம் நிறைந்த இடத்தில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.