தமிழ்நாடு

தவெக மாநாட்டில் இளைஞருக்கு நேர்ந்த சோகம்...அதிர்ச்சி அடைந்த விஜய்

By Jayakumar
22 Aug 2025, 07:30 AM
மதுரை தவெக மாநாட்டில் பங்கேற்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரையில் நடைபெற்றது.இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இளைஞர் உயிரிழப்பு

இந்த மாநாட்டில் பங்கேற்க நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த ரோஷன் (18) என்ற இளைஞர் தனது நண்பர்களோடு சென்றுள்ளார். மாநாட்டு நிகழ்வுகள் நடைபெற்று கொண்டிருக்கும்போது அதிக வெயில் மற்றும் கூட்ட நெரிசலால் திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளார்.

உடனடியாக அருகிலிருந்தவர்கள் மாநாட்டு திடலில் மருத்துவக்குழு மூலம் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்பு சொந்த ஊருக்குத் திரும்பும் வழியில் சமயநல்லூர் பகுதியில் மீண்டும் மூச்சுதினறல் ஏற்பட்டு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விஜய் அதிர்ச்சி

தவெக மாநாட்டிற்கு சென்ற ரோஷன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் கோத்தகிரி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகிகள்மூலம் விஜய்க்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இச்சம்பவம் கேட்டு விஜய் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாகத் தவெக மாநாட்டில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டாலும், குழாய்களில் குடிநீர் வராமல் தொண்டர்கள் அவதி அடைந்தனர். இதனால் நிர்வாகிகளே தண்ணீர் பாட்டில்களை விநியோகம் செய்தனர்.

மேலும் கடும் வெயில் காரணமாக ஏராளமானோர் நாற்காலிகளைத் தலைமேல் வைத்துக்கொண்டும் துணிகளைக் கூடாங்களாக மாற்றிக்கொண்டு அதன் நிழல்களில் தங்கினர். கடும் வெயில் காரணமாகச் சிலர் மயக்கம் அடைந்தனர். அவர்களை மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பலர் குழந்தைகளை அழைத்து வந்து கடும் அவதி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.