Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டம் பாய வேண்டும் - விசிக வழக்கறிஞர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

By VASUKI
10 Sep 2025, 06:26 PM
ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிக வழக்கறிஞர் பிரிவினர் புகார் அளித்துள்ளனர்.
காவல்துறையினரைத் தாக்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டு, ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள புரட்சித் தமிழகம் கட்சியைச் சேர்ந்த ஏர்போர்ட் மூர்த்தி மீது, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக) வழக்கறிஞர் பிரிவினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளனர்.

சமீபத்தில், சென்னை டிஜிபி அலுவலக வாயிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும், ஏர்போர்ட் மூர்த்தி தலைமையிலான புரட்சித் தமிழகம் கட்சியினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, அது மோதலாக மாறியது.

இந்த மோதலின் போது, ஏர்போர்ட் மூர்த்தி கத்தியை எடுத்துத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார், கத்தியால் தாக்கிய ஏர்போர்ட் மூர்த்தியை மட்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்று விசிக வழக்கறிஞர் அணி சார்பில் உதயகுமார் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் ஏர்போர்ட் மூர்த்தி நடந்து கொண்டுள்ளார். எனவே, அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை ஒரு வருடம் வெளியே வராதபடி சிறையில் அடைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.