Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

அவமானப்படுத்திய வங்கி ஊழியர்கள்..விவசாயி எடுத்த விபரீத முடிவு: அரசுக்கு வலுக்கும் கோரிக்கை

By MUTHUKRISHNAN
01 May 2025, 02:48 PM
தனியார் வங்கி ஊழியர்கள் அவமானப்படுத்தியதால் விவசாயி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Farmer suicide: வாழப்பாடியினை சேர்ந்த விவசாயி வடிவேலுவின் தற்கொலைக்கு காரணமான வங்கி ஊழியர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுத்தொடர்பாக அச்சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு-

”சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், பித்தியாம் பாளையத்தை சேர்ந்த விவசாயி வடிவேலு, வாழப்பாடியிலுள்ள தனியார் வங்கியில் தனி நபர் கடன் பெற்றிருந்தார். கடைசி தவணையைத் தவிர அனைத்து தவணைகளையும் இதுவரை முறையாக கட்டி உள்ளார். குடும்ப சிரமம் காரணமாக கடைசித் தவணையை கடந்த 15 நாட்களாக செலுத்த முடியாமல் சிரமப்பட்டு உள்ளார், வாழப்பாடியிலுள்ள தனியார் வங்கி ஊழியர்கள் தினசரி அவரது அலைபேசிக்கு தொடர்புகொண்டு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளார்கள், அதோடு நேரில் சென்று அவரது வீட்டில் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் கடுமையாக அவமானப்படுத்தியதால் வேறு வழியின்றி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் நிறைய தொடர்ந்து நடந்து வருவதால், தமிழ்நாடு அரசு தற்போது கட்டாய கடன் வசூல் தடை சட்டத்தை சட்டமன்றத்தில் இயற்றியுள்ளது. தனியார் வங்கி ஊழியர்கள் மீது சாதாரண தற்கொலை முயற்சிக்கு தூண்டியதாக மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படவில்லை.

மாறாக தனியார் வங்கி ஊழியர்களுக்கு ஆதரவாக திமுகவைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக தலையிட்டு, இறந்த வடிவேலுவின் குடும்பத்தினரை சமாதானப்படுத்தி, வடிவேலுவின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கும், அடக்கம் செய்வதற்கும் நெருக்கடி கொடுத்து ஒப்புக் கொள்ள வைத்துள்ளனர்.

வங்கியிடமிருந்து இழப்பீடு பெற்று தருவதற்கு விவசாய சங்கத்தினரை விடாமல், இறந்த விவசாயி வடிவேலுவின் குடும்பத்திற்கு மிகப்பெரிய துரோகத்தை உள்ளூர் திமுக-வினர் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயின் குடும்பத்திற்கு ஆதரவாக நின்று வங்கியிடமிருந்து இழப்பீடு பெற்று தர வேண்டியவர்கள், வங்கி ஊழியர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டது பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடையே மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்ச ரூபாய் வழங்கிய தமிழ்நாடு முதல்வர் அவர்கள், நாட்டு மக்களின் உணவுக்காக உழைத்த விவசாயி வடிவேலுவின் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.