Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

மையோனைஸுக்கு ஓராண்டு தடை.. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு

By nagalekshmi
24 Apr 2025, 07:50 AM
முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸுக்கு ஓராண்டு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
உணவு பிரியர்களின் விருப்பமான உணவு வகைகளில் மையோனைஸும் ஒன்றாகும். சிக்கன் முதல் பல வகை உணவுகளுக்கும் மக்கள் மையோனைஸை அதிகமாக பயன்படுத்துகின்றனர். பச்சை முட்டையிலிருந்து எடுக்கப்படும் இந்த மையோனைஸ் உணவு பிரியர்களின் விருப்பமான துணை உணவாக இருந்தாலும் உடல்நலத்திற்கு பல்வேறு தீங்குகளை விளைவிப்பதாக கூறப்படுகிறது.

சில இடங்களில் மையோனைஸின் தரம் மற்றும் சுகாதாரம் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுகின்றனர். அதாவது, சில உணவகங்களில் கெட்டுப்போன மையோனைஸை கொடுப்பதாகவும் இதை அறியாமல் உணவு பிரியர்கள் அதை வாங்கி சாப்பிடுவதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், முறையற்ற வகையில் மையோனைஸ் தயார் செய்வது மற்றும் முறையாக சேமித்து வைக்கப்படாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் மையோனைஸ் பொது சுகாதாரத்திற்கு அதிக பாதிப்பை விளைவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸுக்கு ஓராண்டு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, ஓராண்டுக்கு மையோனைஸை உற்பத்தி செய்யவோ, சேமித்து வைக்கவோ, விநியோகம் செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது என தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.