Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

திருப்பூர் எஸ்.எஸ்.ஐ கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி என்கவுன்ட்டரில் பலி!

By Christon
07 Aug 2025, 10:43 AM
திருப்பூர் அருகே எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மணிகண்டன், போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மணிகண்டன், போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். சம்பவம் நடந்த இடத்திற்கு ஆயுதத்தைக் கைப்பற்ற அழைத்துச் சென்றபோது, போலீசை அரிவாளால் தாக்கிவிட்டுத் தப்ப முயன்றதால், அவரைச் சுட்டுக்கொல்ல நேர்ந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

எஸ்.எஸ்.ஐ. கொலை

நேற்று முன்தினம் இரவு, குடிமங்கலம் பகுதியில் உள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மகேந்திரனுக்குச் சொந்தமான தோட்டத்தில் பணியாற்றி வந்த மூர்த்திக்கும், அவரது மகன்களான தங்கபாண்டியன் மற்றும் மணிகண்டன் ஆகியோருக்கும் இடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டது. மகன் மணிகண்டன் தனது தந்தையை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல், அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றார். அப்போது ஆத்திரமடைந்த மணிகண்டன், சண்முகவேலை அரிவாளால் கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளார்.

குற்றவாளிகளைத் தேடிய காவல்துறை

சண்முகவேலின் ஓட்டுநர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலைக்குப் பிறகு தலைமறைவாக இருந்த மூவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். நேற்று, மூர்த்தி மற்றும் தங்கபாண்டியன் ஆகிய இருவரும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரணடைந்தனர்.

முக்கிய குற்றவாளி என்கவுன்ட்டரில் பலி

இதனைத்தொடர்ந்து, தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான மணிகண்டனை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர், கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதத்தைக் கைப்பற்ற, அவரைச் சிக்கனூர் அருகே உள்ள உப்பாறு ஓடைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே, மணிகண்டனைப் பிடித்திருந்த உதவி ஆய்வாளர் சரவணகுமார் என்பவரை மணிகண்டன் அரிவாளால் வலது கையில் தாக்கிவிட்டுத் தப்பி ஓட முயன்றார். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த ஆய்வாளர் திருஞான சம்பந்தம், மணிகண்டனைச் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காவல் உதவி ஆய்வாளர் சரவணகுமார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் உடுமலைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.