திருவள்ளூர் மாவட்டத்தில் காதல் விவகாரம் தொடர்பாக சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், பெண்ணின் தந்தை உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி மற்றும் கூடுதல் காவல் துறை இயக்குநர் (ஏடிஜிபி) ஜெய்ராம் ஆகியோருக்குத் தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஏடிஜிபி ஜெய்ராம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், அவரிடம் திருவள்ளூர் மாவட்ட போலீசார் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டனர்.
அரசியல் வட்டாரத்தில் இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டார். அதன்படி, சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஏடிஜிபி ஜெய்ராமுக்கு இதுவரை ஏன் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்படவில்லை எனவும், சரியான முறையில் விசாரிக்கவில்லை என்றால் வழக்கினை சிபிஐக்கு மாற்ற நேரிடும் எனவும் நீதிபதிகள் கண்டித்தனர். இதனைத் தொடர்ந்து, நேற்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என ஏடிஜிபி ஜெய்ராமுக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சம்மனின் அடிப்படையில் காஞ்சிபுரம் சிபிசிஐடி அலுவலகத்தில் ஏடிஜிபி ஜெய்ராம் விசாரணைக்காக ஆஜரானார். ஆஜரான அவரிடம் 4 மணி நேரமாக சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) ஜவகர் தீவிர விசாரணை மேற்கொண்டார்.
குறிப்பாக, 50-க்கும் மேற்பட்ட கேள்விகளை அவரிடம் கேட்டு எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் பெறப்பட்டதாகவும், அதனை வீடியோ பதிவு செய்ததாகவும் சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடத்தலுக்கு அரசு காரைக் கொடுத்திருப்பதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அது தொடர்பான பல்வேறு கேள்விகளை அவரிடம் சிபிசிஐடி போலீசார் கேட்டதாகவும், சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
யாரிடம் காரைக் கொடுத்தார்? என்ன கூறி காரைப் பெற்றனர்? எந்த நோக்கத்துடன் காரைப் பெற்றனர்? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.