தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!

By Christon
22 Jun 2026, 01:25 PM
திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த எழுமலை ராம ரவிக்குமார் உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி, வழக்கமான இடங்களைத் தவிர்த்து திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவு நிறைவேற்றப்படாததால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தற்போது மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாகத் தமிழக அரசு தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முன்னதாக உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதி ராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில், திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள வழக்கங்களின்படி, அங்குள்ள விநாயகர் கோவிலில் மட்டுமே தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று கோரி இந்த மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்தது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.