தமிழ்நாடு

Selvaperunthagai : யார் யாரோ இருக்காங்க... உதயநிதி துணை முதல்வராவதில் என்ன தப்பு.. செல்வபெருந்தகை வரவேற்பு

By leninakathiya
11 Aug 2024, 10:30 PM
Selvaperunthagai on Udhayanidhi Stalin as Deputy CM : யார் யாரோ தற்பொழுது இந்தியாவில் முதலமைச்சராக உள்ளார்கள். உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவதில் எந்த தவறும் கிடையாது என்று செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

Selvaperunthagai on Udhayanidhi Stalin as Deputy CM : சென்னை கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் செயல்வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டில்லி பாபு தலைமையில் நடைபெற்ற இந்த கலந்தாய்வு கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அதனைத் தொடர்ந்து செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்திக்கையில் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. தற்போது பாஜக சுதந்திரத்தை அவர்கள் தான் வாங்கினார்கள் என்பது போல ஒரு தோற்றத்தை கொண்டு வருகிறார்கள்.

நாடு சுதந்திரம் அடைந்ததற்கு காங்கிரஸ் பேரியக்கமும் பொதுமக்களின் தியாகமும் கலந்துள்ளது. இதனை பாஜக பொதுமக்களிடத்தில் தவறாக சொல்கிறது. நாளை முதல் தொடர்ந்து ஒவ்வொரு வட்டங்கள் மற்றும் மாவட்டம் தோறும் தேசியக்கொடி ஏந்திய காங்கிரஸ் தொண்டர்கள் சுதந்திர போராட்டத்தில் காங்கிரஸின் பங்கு என்ன என்பதை பொதுமக்களுக்கு விளக்கி சொல்வார்கள்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழக அரசின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது. தற்போது புலன் விசாரணை நடைபெற்று வருவதால் அதைப்பற்றி அதிகமாக பேச விரும்பவில்லை. ஆம்ஸ்ட்ராங் மனைவி மற்றும் அவர்கள் தொண்டர்கள் மீது போடப்பட்ட வழக்கை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

யார் யாரோ தற்பொழுது இந்தியாவில் முதலமைச்சராக உள்ளார்கள். உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவதில் எந்த தவறும் கிடையாது. காங்கிரஸ் பேரியக்கம் அதை முழு மனதோடு வரவேற்கிறது” என தெரிவித்தார்.

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக செயலாற்றி வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் வழங்கப்படலாம் என ஊகங்கள் அடிப்படையில் செய்திகள் வெளியாகி வருகின்றன. அடுத்த துணை முதலமைச்சர் உதயநிதி என்று சமூக வலைதளங்களில் கருத்து உலா வருவது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கேட்கப்பட்ட போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் முடிவு எடுப்பார் என தெரிவித்தார். அமைச்சர் உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கேட்கையில், "துணை முதலமைச்சர் பதவி குறித்து கோரிக்கை வலுத்து வருகிறது; ஆனால் அது பழுக்கவில்லை" என்று பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.