Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

ரேசன் அரிசியை கடத்தி வந்து அரைத்து விற்பனை செய்த பெண் கைது..!

By VASUKI
13 Feb 2025, 08:59 PM
ரேசன் அரிசியை கடத்தி வந்து அரைத்து மாவு பாக்கெட்டுகளாக விற்பனை செய்து வந்த பெண்ணை போலீசார் கைது செய்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைத்தனர். 

சென்னை ஓட்டேரி கொசப்பேட்டை கந்தசாமி கோவில் தெருவில் ரேசன் அரசி மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருப்பதாக ஓட்டேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று வீட்டில் சோதனை நடத்தியபோது மறைத்து வைத்திருந்த 322 கிலோ அரிசி கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 3 கிரைண்டர், மாவு பேக்கிங் செய்யும் மிஷின் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

ரேசன் அரிசியை பதுக்கி வைத்திருந்ததாக கொசப்பேட்டையைச் சேர்ந்த உஷா என்பவரை போலீசார் கைது செய்தனர். இதன் பிறகு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அவர்கள் நேரில் வந்து பறிமுதல் செய்த அனைத்தையும் கொண்டு சென்றனர். கைதான உஷாவையும் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.  ரேசன் அரிசியை கடத்தி வந்து அரைத்து மாவாக விற்பனை செய்து வந்தது தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து இதே போன்று தமிழகத்தில் ரேசன் அரிசி கடத்தல் தொடர்கதையாகி வருகிறது. இதுபோன்று ரேசன் அரிசி கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், சோதனையை அதிகரிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.