Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

TN Ration Shop : ரேஷனில் பாமாயில், துவரம் பருப்பு வாங்கலையா?.. உங்களுக்கு குட் நியூஸ்!

By Kumudam News
02 Aug 2024, 02:28 AM
TN Govt Announcement on Toor Dal, Palm Oil in Ration Shop : ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களையும் மாதம்தோறும் தங்கு தடையின்றி விநியோகம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார்.

TN Govt Announcement on Toor Dal, Palm Oil in Ration Shop : தமிழ்நாட்டில் நியாய விலைக்கடைகள் எனப்படும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இதேபோல் பாமாயில், சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மிக குறைந்த விலையில் மக்களுக்கு மாதம்தோறும் வழங்கப்படுகின்றன.

ஆனால் பாமாயில், சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் அனைத்து மக்களுக்கும் கிடைப்பதில்லை என தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இது தொடர்பாக ரேஷன் கடைக்காரர்களிடம் மக்கள் கேட்டால் கொள்முதல் குறைவாக வந்ததால் இருப்பும் உடனடியாக தீர்ந்து விடுகிறது என்று ஏதாவது ஒரு காரணம் சொல்லி வருகின்றனர். 

இதேபோல் கடந்த ஜூலை மாதமும் பெரும்பாலான ரேஷன் கடைகளில் அனைத்து மக்களுக்கும் மேற்கண்ட பொருட்கள் வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தன. ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களையும் தங்கு தடையின்றி விநியோகம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார். 

இந்நிலையில், ரேஷனில் ஜூலை மாதம் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வாங்காதவர்கள் ஆகஸ்ட் மாதம் வாங்கிக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக உணவுப்பொருள் வழங்கல் துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30க்கும் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது. 

ஜூன் 2024 ஆம் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற இயலாத குடும்ப அட்டைதாரர்கள், ஜூன் 2024ஆம் மாத துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை ஜூலை 2024 ஆம் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என சட்டமன்றத்தில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் ஜூன் 2021ஆம் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற முடியாதவர்கள் வசதிக்காக ஜுலை 2024ஆம் மாதத்தில் நியாய விலைக் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக் கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், ஜூலை 2024ஆம் மாதத்தில் சிறப்பு பொது விநியோகத்திட்டப் பொருட்கள் முழுமையாக நகர்வு செய்யப்படாத காரணத்தினால் குடும்ப அட்டைதாரர்களால் ஜூலை 2024ஆம் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் முழுமையாக பெற இயலவில்லை.

ஆதலால், குடும்ப அட்டைதாரர்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு ஜூலை 2024ஆம் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட் பெற இயலாத அட்டைதாரர்கள் அவர்களுக்கான ஜுலை 2024 ஆம் மாத துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை ஆகஸ்ட் 2024 ஆம் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.