Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

சூறைக்காற்றுக்கு பறந்த அரசு பஸ்சின் மேற்கூரை…வைரலாகும் வீடியோ

By Jayakumar
29 Jul 2025, 05:46 PM
சூறைக்காற்றுக்கு அரசு டவுன் பஸ்சின் மேற்கூரை பெயர்ந்து பறந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள குருந்தம்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி இன்று அரசு டவுன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

காற்றில் பறந்த பஸ்சின் மேற்கூரை

அந்த பஸ்ஸில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார அருகே டவுன் பஸ் சென்றபோது அந்த பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியது.

இதில் திடீரென டவுன் பஸ்சின் மேற்கூரை தகரம் முழுவதும் பெயர்ந்து காற்றில் பறந்தது. இதனால் பஸ்ஸில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர். அதனை தொடர்ந்து பஸ் ஓட்டுநர் பஸ்சை சாலையோரம் நிறுத்தினார்.

பயணிகள் அதிர்ச்சி

அதன் பின்னர் பஸ்சில் இருந்த பயணிகள் மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பஸ் டிரைவர் அந்த பஸ்சை மெதுவாக இயக்கி பணிமனைக்கு கொண்டு சென்றார்.இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த காட்சியை அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்தக் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.