Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

இரட்டை இலை சின்னம் விவகாரம்... புகார்தாரர் மனு தள்ளுபடி..!

By VASUKI
20 Dec 2024, 12:38 PM
இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக அளித்த புகார் மீது முடிவெடுக்க மேலும் 8 வார கால அவகாசம் வழங்க வேண்டும் என   புகார்தாரர் சூரியமூர்த்தி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக அளித்த புகார் மீது முடிவெடுக்க மேலும் 8 வார கால அவகாசம் வழங்க வேண்டும் என   புகார்தாரர் சூரியமூர்த்தி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக தொடர்பாக, நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை, அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு அளித்த  மனுவை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். 

இந்த விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்  உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்டு, இந்த மனு மீது நான்கு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என, தேர்தல்ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது. 

 இந்த உத்தரவின் அடிப்படையில், இந்த விவகாரம் தொடர்பாக டிசம்பர் 19 ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமான விளக்கத்தை அளிக்கும்படியும், டிசம்பர் 23 ம் தேதி டில்லி தலைமை தேர்தல் ஆணையத்துக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், புகார்தாரர் சூர்யமூர்த்தி ஆகியோருக்கு, தலைமைத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த பதில் தனக்கு வழங்கப்படாத நிலையில், தனது கருத்துக்களை தெரிவிக்க முடியவில்லை என்பதால், தனது மனுவை பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு மேலும் எட்டு வார கால அவகாசம் வழங்கக் கோரி சூரிய மூர்த்தி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியம் மற்றும் சி.குமரப்பன் அமர்வு, தேர்தல் ஆணையம் நான்கு வாரத்தில் மனு மீது முடிவெடுக்கும் என தெரிவித்ததாகவும்,  நீதிமன்றம் எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்கவில்லை என்றும் கூறி, மனு மீது முடிவெடுக்க கூடுதல் அவகாசம் வழங்க மறுத்து, சூரியமூர்த்தியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.