Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

'ஓசியில்’ பொருட்கள் கேட்டு அட்டகாசம்.. தட்டிக்கேட்ட நபருக்கு அரிவாள் வெட்டு!

By Christon
11 Aug 2025, 09:09 PM
திருவள்ளூர் அருகே ஒரு பேக்கரியில், பணம் கொடுக்காமல் பொருட்களைக் கேட்டு அட்டகாசம் செய்த ரவுடிகள், அதைத் தட்டிக்கேட்ட நபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு பேக்கரியில், பணம் கொடுக்காமல் பொருட்களைக் கேட்டு அட்டகாசம் செய்த ரவுடிகள், அதைத் தட்டிக்கேட்ட ஒருவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'ஓசியில்' பொருட்கள் கேட்டு அட்டகாசம்

நேற்று இரவு, வேப்பம்பட்டு பகுதியில் உள்ள ஒரு பேக்கரிக்கு வந்த இரண்டு இளைஞர்கள், உரிமையாளர் நந்தகுமாரிடம் 'ஓசியில்' பொருட்கள் கேட்டுள்ளனர். அவர் மறுக்கவே, ஆத்திரமடைந்த அவர்கள் கடையில் இருந்த பொருட்களைத் தரையில் வீசி, கடை நடத்தினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.

தட்டிக்கேட்ட நபருக்கு அரிவாள் வெட்டு

அப்போது, அருகில் இருந்த மற்றொரு கடையின் உரிமையாளர், இந்த அட்டகாசத்தைப் பார்த்து அவர்களைத் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அவரை விரட்டி வெட்டியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அந்த நபர், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

காவல்துறையின் நடவடிக்கை

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த செவ்வாய்பேட்டை போலீசார், பேக்கரியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், அட்டகாசத்தில் ஈடுபட்டவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த அருண் மற்றும் கோபால் என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. உடனடியாகச் செயல்பட்ட போலீசார், அருண் மற்றும் கோபால் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

'ஓசியில்' பொருட்கள் கேட்டு அட்டகாசம் செய்து, தட்டிக்கேட்டவரை அரிவாளால் வெட்டிய இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வேப்பம்பட்டு பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.