Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகணும்..EPS-ஐ எச்சரித்த OPS

By Jayakumar
27 Mar 2025, 03:31 PM
இபிஎஸ் அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதுதான் மரியாதையாக இருக்கும். இல்லையென்றால் அவர் அவமரியாதையை சந்திப்பார் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

மதுரையில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக அலுவலகத்தில் தவறான ஒரு பொதுக்கூட்டத்தைக் கூட்டி இருந்தார்கள், நாங்களும் ஒரு பகுதியில் சென்று அமர்ந்து கொள்ளலாம் என வந்தோம். கழக அலுவலகத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலேயே 8 கழக தலைவர்கள் கொண்ட எங்களை தடுத்து நிறுத்தி தாக்கினார்கள். அதுமட்டுமின்றி அவர்களாகவே தலைமை கழகத்தை அடித்து உடைத்து விட்டு, எங்கள் மீது பழி போடுகிறார்கள். இவை அனைத்தும் காவல்துறையினர் பதிவில் இருக்கிறது.

இபிஎஸ் அவமரியாதையை சந்திப்பார்

நான் இணைய வேண்டும் என்று கூறவில்லை, பிரிந்த சக்திகள் அனைத்தும்  ஒன்றிணைந்தால் தான் அதிமுக வெற்றி பெறும் சூழல் உருவாகும் என கூறுகிறேன்.எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எந்த காலத்திலும் வெற்றி பெறக் கூடாது என்ற நடவடிக்கையை செய்து வருகிறார்.

Read more: தீரன் பட பாணியில் ஸ்கெட்ச்... விமானத்தில் வந்து கொள்ளை... யார் இந்த இராணி கொள்ளையர்கள்?

ஒற்றைத் தலைமை வந்தால் அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற முடியும் என்று தான் தலைமைக் கழகத்தில் எங்களை ஆள் வைத்து பேசினார்கள். ஆனால் இதுவரை நடந்த  ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறவில்லை. அவராகவே பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதுதான் மரியாதையாக இருக்கும். இல்லையென்றால் அவர் அவமரியாதையை சந்திப்பார்” என தெரிவித்தார்.

அதிமுகவில் இருக்க தகுதியற்றவர் ஓபிஎஸ்

இந்த நிலையில் நெல்லையில் அதிமுக நிர்வாகியின் துக்க நிகழ்வில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி வந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் ஓபிஎஸ் பேசியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “கோவிலாக கருதும் அதிமுக அலுவலகத்தை ரவுடிகள் மூலம் தாக்கியவர் ஓ.பன்னீர்செல்வம். எனவே அவரை பிரிந்தது, பிரிந்ததுதான். அதிமுகவில் இருக்க தகுதியற்றவர் ஓபிஎஸ்” என பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more: கல்லூரி மாணவனை கத்தியால் தாக்கிய மர்ம நபர்கள்.. பரபரப்பான பகுதி