Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

சென்னை தி.நகரில் ரூ.164.92 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம்.. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

By Christon
30 Sep 2025, 12:47 PM
சென்னை தி.நகரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
சென்னையின் மிகவும் முக்கியமான வணிகப் பகுதியான தியாகராய நகரில் (தி.நகர்) நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், புதிதாகக் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

பாலத்தின் அமைப்பு

சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.164.92 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலம், சி.ஐ.டி. நகர் பிரதான சாலை மற்றும் தெற்கு உஸ்மான் சாலையை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. bமறைந்த தியாகராய நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் நினைவாக, 'ஜெ. அன்பழகன் மேம்பாலம்' என்று இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் 1200 மீட்டர் நீளமும் 8.40 மீட்டர் அகலமும் கொண்டது. இது 53 இரும்புத் தூண்களுடன் இருவழிப் பாதையாக அமைக்கப்பட்டுள்ளது.

தெற்கு உஸ்மான் சாலையில் ஏற்கனவே உள்ள 800 மீட்டர் நீள கான்கிரீட் மேம்பாலத்துடனும் உயரிய தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டு, இந்தப் பாலம் ஆக மொத்தம் 2 கிலோ மீட்டர் நீளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இது சென்னையின் மிக நீண்ட பாலங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

பயன்பாடு மற்றும் போக்குவரத்துத் தீர்வு

வாகனங்கள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் வசதியாக, தியாகராய நகர் பேருந்து நிலையத்திலிருந்து பாலத்தில் ஏறுவதற்கு 120 மீட்டர் நீளத்திலும், தெற்கு உஸ்மான் சாலை பாலத்திலிருந்து தியாகராய நகர் பகுதிக்கு இறங்குவதற்கு 100 மீட்டர் நீளத்திலும் அணுகு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இதன் இருபுறமும் நடைபாதைகளுடன் 6 மீட்டர் அகல சேவைச் சாலைகளும் உள்ளன.

இந்த 2 கிலோ மீட்டர் நீள மேம்பாலத்தின் மூலம் தினசரி சராசரியாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணித்து, சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் போக்குவரத்து நெரிசலின்றிப் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தி.நகரில் மக்கள் நெரிசலின்றிப் பயணிக்க இந்தப் புதிய மேம்பாலம் ஒரு முக்கியத் தீர்வாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.