Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

திமுக பொதுக்குழுவில் முப்படையை பாராட்டி இருக்கலாம் – தமிழிசை செளந்தரராஜன் ஆதங்கம்

By Jayakumar
02 Jun 2025, 06:27 AM
நடிகர் கமலஹாசன் திமுக ஒழித்து கட்ட வேண்டும் என்று கட்சி ஆரம்பித்து, இன்று அவர்களுடன் கூட்டணி என்பது சந்தர்ப்பவாதம் என தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்
ஓரணியில் தமிழகம் இல்லை, தள்ளாடும் தமிழகமாக இருக்கிறது என தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.

முப்படையை பாராட்டி தீர்மானம்

தமிழிசை சௌந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் , “முப்படை தளபதிகள் வீரர்கள் ஆகியோர் உயிரை பணயம் வைத்து ஆபரேஷன் சிந்தூரை பிரதமர் மோடி நடத்திக்காண்பித்து இருக்கிறார்கள் , தி.மு.க பொதுக்கூட்டத்தில் முப்படையை பாராட்டியாவது ஒரு தீர்மானம் நிறைவேற்றி இருக்கலாம் என தெரிவித்தார்.

அக்கூட்டத்தில் ஏழாவது தீர்மானமாக உதயநிதிக்கு எல்லா விதத்திலும் துணை போவார்களாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கனிமொழிக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்து ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு சொல்லும் பொழுது தமிழக மக்களுக்காக நிச்சயமாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், அனைத்தையும் அரசியலாக்குவது போல் நாட்டின் பாதுகாப்பையும் அரசியலாக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.


உதயநிதிக்கு ஏன் துணை நிற்கிறார்கள்?

உதயநிதிக்கு ஏன் ? துணை நிற்கிறார்கள் என்று தெரியவில்லை, இடையில் வருகின்ற பிரச்னையால் துணை நிற்கிறார்களா ? அல்லது அவர்களது நண்பர்கள் எல்லாம் வேறு, வேறு நாடுகளுக்கு ஓடிப் போனார்களே அதற்காக துணை நிற்கிறார்களா ? என்று தெரியவில்லை என தெரிவித்தார். வக்ஃபு சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது என்று கூறுகிறார்கள்.ஆனால் அது எதிரானது இல்லை என்றார். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று மக்களை பிரித்து ஆளுகிறதை மத்திய அரசு செய்கிறது என கூறுகிறார்கள் என கூறியவர், ஒரே குடும்பம் என்று வைக்கவில்லை என தெரிவித்தார்.

மேலும் முதலமைச்சர் கோமாளிகள் என்று குறிப்பிடுகிறார். ஆனால் அவர் ஏமாளிகள் ஆக போகிறார்கள் என தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் கூட்டணி கட்சிகள் பற்றி நாகரீகமாக பேசினால் நல்லது என்று நினைக்கிறேன். அப்படி பார்த்தால் நீங்கள் காங்கிரஸ் கட்சிக்கு அடி பணிந்து உள்ளீர்களா ? எந்த விதத்தில் இலங்கை தமிழர்களை கொன்ற காங்கிரசுக்கும் அவசர நிலை பிரகடனம் கொண்டு வந்த காங்கிரஸ்கும் துணை நிற்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

காழ்புணர்ச்சியுடன் தீர்மானங்கள்

ஒரு அணியில் தமிழகம் இல்லை, தள்ளாடும் தமிழகம் என விமர்சித்த அவர், ஆம்னி பஸ் கட்டணம் நான்காயிரம் ரூபாயையும் தாண்டி விட்டதாகவும், அதனை கட்டுப்படுத்த முடியவில்லை என்றார். தி.மு.க தீர்மானித்தில் ஒரு தீர்மானமாக தமிழகத்துக்கு உதவாத ரயில்வே துறைக்கு கண்டனம் என்று குறிப்பிட்டு உள்ளார்கள் என தெரிவித்த அவர் இந்தியாவிலேயே அதிக வந்தே பாரத் ரயில்கள் போடப்பட்டு உள்ளது தமிழகத்தில் என குறிப்பிட்டார்.

மேலும் அந்த தீர்மானங்கள் காழ்புணர்ச்சியுடன் தரப்பட்டு இருப்பதாகவும் ஆபரேஷன் சிந்தூர் விஷயத்தில் அதில் இருந்த பெண்களுக்காவது நன்றி தெரிவித்து இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து எனக் கூறினார்.திட்டத்தை செயல்படுத்தினால் மத்திய அரசிடம் இருந்து நிதி ஒதுக்கப்படும் என்றும் எந்தத் திட்டத்தை செயல்படுத்துகிறார்களோ அதற்கான நிதி தான் ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கமல் செய்வது சந்தர்ப்பவாதம்

Constructive ஆக இருங்கள் Destructive ஆக இருக்காதீர்கள் என கூறினார். தி.மு.க பொதுக் கூட்டம் கண்டனத்திற்காகவே போடப்பட்டு கண்டனத்திற்காகவே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருப்பது போல் இருப்பதாக விமர்சித்தார்.

தமிழகத்தை மேம்படுத்துவதற்காக தீர்மானங்கள் போடப்பட்டால் நல்லது என்றும் கூறினார். கமலஹாசன் திமுகவை ஒழித்து கட்டுவதற்காக தான் கட்சியை ஆரம்பித்தார். ஆனால் இன்று அவர்களுடனே சேர்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்த அவர், அதெல்லாம் சந்தர்ப்பவாதம் என கூறினார். அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணி குறித்து தலைவர்கள் முடிவுகளுடன் ஒன்றாக பயணிப்போம் என தெரிவித்தார்.