Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

போராட்டங்களால் திணறும் தலைநகரம்.. கொந்தளிக்கும் தூய்மைப் பணியாளர், இடைநிலை ஆசிரியர்கள்!

By Christon
30 Dec 2025, 01:37 PM
சென்னையில் இன்று (டிசம்பர் 30) தூய்மைப் பணியாளர்களும், இடைநிலை ஆசிரியர்களும் தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தித் தனித்தனியாகப் போராட்டத்தில் ஈடுபட்டதால், பல்வேறு பகுதிகளில் பரபரப்பும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
சென்னையில் இன்று (டிசம்பர் 30) தூய்மைப் பணியாளர்களும், இடைநிலை ஆசிரியர்களும் தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தித் தனித்தனியாகப் போராட்டத்தில் ஈடுபட்டதால், பல்வேறு பகுதிகளில் பரபரப்பும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

அண்ணா அறிவாலயம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் தர்ணா

சென்னை மாநகராட்சியின் ஐந்து மற்றும் ஆறாம் மண்டலங்களைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள், தூய்மைப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரியும் 100 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, இன்று தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் முன்பு அவர்கள் திரண்டு, சாலையிலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்திற்கிடையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், அதனை ஏற்க மறுத்த பணியாளர்களை போலீசார் குண்டுக்கட்டாகத் தூக்கி கைது செய்து வாகனங்களில் ஏற்றி மண்டபங்களுக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அண்ணா அறிவாலயம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இடைநிலை ஆசிரியர்களின் 5-வது நாள் போராட்டம்

'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்திப் பல ஆண்டுகளாகப் போராடி வரும் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள், கடந்த 26-ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த நான்கு நாட்களாக (டிச. 26 முதல் 29 வரை) டி.பி.ஐ. வளாகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், கலெக்டர் அலுவலகம் மற்றும் உழைப்பாளர் சிலை அருகே போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை போலீசார் கைது செய்து மண்டபங்களில் அடைத்து மாலையில் விடுவித்தனர்.

இந்த நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி, திமுகவின் 311-வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, இடைநிலை ஆசிரியர்கள் இன்று 5-வது நாளாகச் சென்னை எழும்பூரில் உள்ள கல்வி அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.